திடீரென குலுங்கிய பெரு பதறிப்போன மக்கள்.
பெருவின் தெற்கு ஆண்டில் மலைப்பகுதியில் சக்திவாய்ந்த 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் தெற்கு பெருவின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் பதறி போன பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று பெரு. பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 3.5 கோடி தான்.
இந்த நாட்டில் தான் இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் மையப்பகுதி அயாகுச்சோ பிராந்தியத்தில் உள்ள உபஹுவாச்சோ நகருக்கு வடமேற்கே சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.
பூமிக்கு அடியில் சுமார் 66.7 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பெருவின் தெற்கு பகுதிகளில் உள்ள இகா மற்றும் அரேகிபா உள்ளிட்ட பிராந்தியங்களிலும் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து அதிகாரிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மீட்பு மற்றும் அவசரக்கால நடவடிக்கைகளுக்காகவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள நில அதிர்வு அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றான ரிங் ஆஃப் பையர் பகுதியில் தான் பெரு அமைந்துள்ளது.
இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெருவின் மத்திய கடற்கரை பகுதியில் ஏற்பட்ட 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பிஸ்கோ, சின்சா ஆல்டா மற்றும் இகா பகுதிகளில் மிக பெரிய அழிவை ஏற்படுத்தியது.
அந்த நிலநடுக்கத்தில் 519 பேர் உயிரிழந்ததுடன், 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே