விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க தவெக திட்டமா?
தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை 'தேசிய வெற்றி கழகம்' என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மாநில அளவில் வெற்றிக்கழகத்துடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "அடுத்த பிரதமர் தென்னிந்தியாவிலிருந்துதான் வர வேண்டும், விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர்" என தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
அத்துடன், வட மாநில சமூக வலைதளங்களில் விஜய்க்காக தீவிரப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது காங்கிரஸ் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவில் தேசிய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் சூழலில், தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தினரின் இந்த செயற்பாடு குறித்து, காங்கிரஸ் குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
யாராவது கனவு காண்பதைத் தடுக்க முடியாது என்றும், எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடிப்பது மட்டுமே ஒருவரைப் பிரதமராக்கும் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தமிழகத்தில் ஆட்சி நிலைத்தன்மைக்காக விஜய்யுடன் கைகோர்த்துள்ள காங்கிரஸ், தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் நிலைக்குச் சவாலாக இது அமையக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே