சமஸ்டி கோரிக்கையை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!
சமஸ்டி கோரிக்கையை வலியுறுத்தி கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்.
இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை கோரி முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் நான்காவது வருடத்தின் 28ஆம் நாள் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றது.
வடகிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் சமஸ்டி கோரிக்கையை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 50, 75 மற்றும் 100ஆம் நாட்களில் வடகிழக்கு மக்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதே தமது பிரதான நோக்கம் எனவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு சிவில் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சர்வதேச நீதியை வலியுறுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவிக்கையில், எதிர்வரும் 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தமக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புகள், அரசியல்வாதிகள், சமூக மற்றும் மாவட்ட மட்ட அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தங்களது போராட்டம், உண்மைக்கும் நீதிக்குமான நீண்டகாலப் போராட்டமாக தொடர்வதாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு பொறிமுறைகளில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், பல்வேறு ஆணைக்குழுக்களிடம் முறையிட்டும் உரிய நீதி கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்து போராடி வருவதாகவும், எதிர்வரும் சர்வதேச மாநாட்டின் மூலம் உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் தங்களது கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கில் வாழும் அனைத்து தமிழ் மக்களும், சட்டவல்லுநர்கள், கல்விமான்கள், அறிஞர்கள், மனிதநேய செயற்பாட்டாளர்கள் மற்றும் தங்களுக்கு ஆதரவாக செயற்படும் அமைப்புகளும் மாநாட்டில் கலந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே