அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை – அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலின்போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், சுமார் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், குறித்த இரு தரப்பினரையும் கண்டி ‘சஹஸ் உயன’ பகுதிக்கு அழைத்த அரசாங்கம், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பகிரங்கமாக உறுதியளித்ததாகவும், எனினும் இதுவரை உரிய சேவைப் பிரமாணக் குறிப்புகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவிப் பெயரை ‘சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்’ என மாற்றியமைத்ததைத் தவிர, அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
‘சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்’ தொடர்பில் மார்ச் மாதத்தில் தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக இந்த இரு தரப்பினருக்கும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவற்றை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் இவர்களை மறந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இவர்களை மறக்காது எனவும், அவர்களின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே