எல் நினோ தாக்கம்: இலங்கையில் வறட்சி மேலும் தீவிரமடையும் அபாயம்!
இலங்கையில் நிலவும் வறட்சி நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவியியல் பேராசிரியர் கலாநிதி எஸ். அண்டனி நோர்பர்ட் எச்சரித்துள்ளார்.
மன்னார், அநுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்க்கொள்ளளவு சுமார் 30 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வறட்சியால் 70,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான குடிநீர் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் எல் நினோவின் தாக்கம் உச்சத்தை அடையக்கூடும் எனவும், இதனால் குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கடுமையான வறட்சி ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் முன்கூட்டியே தயாராக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலை தொடருமானால், 2027ஆம் ஆண்டின் பெரும் போகப் பயிர்ச்செய்கையும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே