கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கள ஆய்வு – பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்
ராஜரட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள மற்றுமொரு முக்கிய நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக இன்று (29) முற்பகல் அத்திட்டப் பகுதியில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டேன்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் பல்வேறு காரணங்களால் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்தின் பணிகளை 2029ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது திட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தை ஆராய்ந்ததுடன், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடினேன். திட்டத்தினால் இடம்பெயர வேண்டிய 315 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் மூலம் காணியும், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளுடன் கூடிய வீடுகளும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.
அத்துடன், குறித்த காணிகளில் சூரிய மின்சக்தியில் இயங்கும் நீரேற்றுப் பாசன முறைகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட் விவசாயப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள மக்களை ஊக்குவிக்குமாறும் ஆலோசனை வழங்கினேன்.
அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதுடன், மன்னார் மற்றும் ‘அரிசிக் களஞ்சியம்’ என அழைக்கப்படும் பிரதேசங்களில் சுமார் 40,000 ஹெக்டேயர் வயல் நிலங்களை இரு பருவங்களிலும் பயிரிடுவதற்கான வாய்ப்பையும் இத்திட்டம் ஏற்படுத்தும்.
எனவே, கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்து, அதன் மூலம் மக்களுக்கு உரிய நன்மைகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே