நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸார் மனிதாபிமான உதவி
மாணவர்களை பொலிஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்ற அதிகாரிகள் ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொத்மலை பொலிஸார் மனிதாபிமான அடிப்படையில் உதவியுள்ளனர்.
பனங்கம்மன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பேருந்து சேவை தடைப்பட்டதால், காமினி திசாநாயக்க பாடசாலைக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 2 கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனை அவதானித்த கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இரண்டு பொலிஸ் ஜீப் வண்டிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், பொலிஸாரின் தலையீட்டின் பின்னர் கொத்மலை பஸ் டிப்போவுடன் கலந்துரையாடப்பட்டு, பிற்பகல் முதல் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி வரை தற்காலிக பேருந்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் துரிதமாக செயற்பட்ட கொத்மலை பொலிஸாருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே