சதொசவில் பொருட்கள் விலை அதிகம்: சானக மதுகொட குற்றச்சாட்டு!
சதொசவில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு! விலையும் அதிகம் – நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தின்போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சதொசவில் பொருட்களை வாங்கச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனியார் பல்பொருள் அங்காடிகளை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது, அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை கேள்விக்குறியாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் சிக்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களே பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான முக்கிய காரணம் என தெரிவித்த அமைச்சர், இதற்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே