மன்னாரின் கனிம வளங்கள் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கனிம வளங்கள், மணல் அகழ்வு மற்றும் வனப்பகுதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இன்று (11) மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் மற்றும் மன்னார் அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், வன வளத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 48 மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வு மற்றும் பிரதேச செயலகங்களுக்கும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கும் இடையிலான அதிகார வரம்புகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், மணல், மண் மற்றும் கல் அகழ்வுக்கான அனுமதிகளை முறையானதும் விஞ்ஞானபூர்வமானதுமான நடைமுறையின் கீழ் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை, மன்னார் மாவட்டத்தின் கிராமிய வீதிகளை புனரமைப்பதற்காக அண்மையில் பயன்படுத்தப்பட்ட 1,302 கனமீற்றர் மணலுக்கு வரி அறவிடுவது தொடர்பான பிரச்சினை மற்றும் வெள்ளாங்குளம் பகுதியில் காணப்படும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.
இப்பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில், எதிர்காலத்தில் அமைச்சரவை மற்றும் ஜனாதிபதி மட்டத்தில் கொள்கை ரீதியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தின் பின்னர் அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே