பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் – பிரசாத் சிறிவர்தன
மக்களை பகிரங்கமாக ஏமாற்றி, மிகப்பெரிய பொய்களைத் தொடர்ந்து கூறிவரும் ஒருவர் நாட்டின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவரா என மக்கள் சிந்திக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, மேடைகளில் தொடர்ச்சியாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தினார்.
மணித்தியாலக் கணக்கில் பேசி மக்களை தவறாக வழிநடத்துவது வெட்கக்கேடான நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீர்த்தேக்கங்களை அமைத்தல் மற்றும் நீர் வளங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் அனுர குமார திஸாநாயக்க வெளியிடும் கருத்துக்களையும் அவர் விமர்சித்தார்.
நாட்டின் மன்னர்கள் காலம் முதல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த தலைவர்கள் வரை நீர் வளத்திற்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டுள்ளதாகவும், இது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விடயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், சாதாரண மக்கள் வாராந்த சந்தைக்கு செல்லும் வழியில் வைத்தியசாலைகளுக்குச் சென்று மருந்துகளைப் பெற்றுக்கொள்வதை எள்ளி நகையாடுவதன் மூலம், அனுர குமார திஸாநாயக்க ஏழை மக்களின் வாழ்க்கை முறையை கேலி செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
சுகாதாரத் துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் உரிய புரிதல் இன்றி, “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வைத்தியர்” போன்ற நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாகவும் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
அத்துடன், கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகளை அனுர குமார திஸாநாயக்க திட்டமிட்டு மறைத்து அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எனவே, இதுபோன்ற அரசியல் பிரசாரங்களால் மக்கள் ஏமாறாமல் உண்மை நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே