ஐஸ் போதைப்பொருள் தகவல் வழங்கியவரை கொலை செய்யத் திட்டம் – மூவர் கைது
500 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நடவடிக்கைக்கு தகவல் வழங்கிய நபரை கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் மூவர் செல்லக்கதிர்காமம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைக்காக அங்கொட லொக்கா தொடர்புடையதாகக் கூறப்படும் பிரியங்கர மற்றும் ரூபன் ஆகிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர்களால் 14 இலட்சம் ரூபா ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை ஒப்பந்தத்தின் பிரதான சந்தேகநபரான மதுக்க சாமர எனப்படும் மதுவாவிடம் இருந்து இரண்டு கத்திகள், 8 கிராம் ஹெரோயின் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ஜீப் வாகனத்தின் போலி இலக்கத் தகடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், சந்தேகநபர் கைது செய்யப்படும் போது தனது மகனுக்கு எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலை மேற்கொண்ட பின்னர் தனது உயிரையும் மாய்த்துக்கொள்ளும் நோக்கில் குறித்த கொலையை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.