கண்டி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொல்கொல்ல நீர்த்தேக்கம் செப். 25 முதல் வெறுமையாக்கம்
கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.
பொல்கொல்ல நீர்த்தேக்கம் செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 27 ஆம் திகதி மாலை 6 மணி வரை முழுமையாக வெறுமையாக்கப்படவுள்ளது.
நீர்த்தேக்கத்தின் மதகுகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் மற்றும் சேதமடைந்த கான்கிரீட் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கண்டி, திகன மற்றும் பலகொல்ல பகுதிகளின் குடிநீர் விநியோகத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே நீரைப் பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் செப்டம்பர் 26 ஆம் திகதி இரவு 10 மணி முதல் சுமார் 14 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது போதுமானளவு நீர் இருப்பதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.