சிறுவர்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் பொறுப்பு – ஜனாதிபதி
சிறுவர்கள் நாட்டின் பொக்கிஷம் என்பதால், அவர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “வாழ்விற்கு பலம்” வீட்டு உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17) கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கும், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் சிறுவர்களுக்கும் வீடுகளை அமைப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்தத் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கத்துடன் சமூகமும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.