சவூதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை: தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், அவருக்கு சட்ட மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (18) காலை அமைச்சருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் ஐந்து வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குறித்த தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்காக சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.