கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள்: வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த புதன்கிழமை (16) குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீனின் உத்தரவின் பேரில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் குறித்த வர்த்தக நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பெருமளவிலான காலாவதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.