ஊழல், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு – சிறீதரன்
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டுக்கு எதிராக அல்லது சட்டத்திற்கு முரணாகச் செயற்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
தம்மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு நாடாளுமன்றத்தில் சாமர சம்பத்துக்கு சவால் விடுத்ததாகவும், இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் சிறீதரன் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழரசுக் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் மதுபானப் பாவனையால் தமிழ் இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும், அடுத்த ஆண்டு தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும்போது முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான முடிவுகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.