இலங்கையில் எரிபொருள் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அமெரிக்க டொலர்கள் எந்த பிரச்சினையும் இன்றி வெளியிடப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலமை ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியுள்ளமையுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட பல நாடுகளில் இருந்து எரிபொருளுக்கான சலுகைகளும் கோரப்பட்டுள்ளது.
இத்தகைய கடன்கள் மற்றும் எரிபொருள் சலுகைகள் கிடைக்காவிடின் கடுமையான நெருக்கடி ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போது இலங்கையின் டொலர் கையிருப்பு 2 பில்லியன் டொலராக குறைந்துள்ளதுடன் எரிபொருள் இறக்குமதிக்காக கையிருப்பில் உள்ள டொலர்கள் வெளியிடப்பட்டால் கையிருப்பு டொலர் கணிசமான அளவு குறைந்து விடும் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என தெரிவித்தார்.
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வது இன்னும் கடினமாக உள்ளது எனவும் டொலர் கையிருப்பு தொடர்ந்து குறைந்து வந்தால் இறக்குமதி நெருக்கடி மிகவும் தீவிரமடையும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.