கனடாவில் இரண்டு தமிழ் பெண்களுக்கு நடந்த திருமணம் பற்றி யாழ்ப்பாண வைத்தியரின் பரபரப்பு பதிவு
கனடாவில் இரு பெண் தன்னின சேர்க்கையாளர்கள் இந்து சமய புரோகிதர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் பல முன்வைக்கப்பட்டு வருகின்றன . இந்தச் செயலானது சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்பவர்களின் போலித்தனங்களையும் சமூக ஊடகங்களில் பேண வேண்டிய ஒழுக்க நெறி தொடர்பான அறிவின்மையையும் வெளிப்படுத்தி உள்ளது. மருத்துவ ஒழுக்க நெறியை கற்பிக்கும் மருத்துவ நிபுணர் என்ற வகையில் இந்தப் பதிவுகள் தொடர்பாக பின்வரும் விடயங்களை அனைவரதும் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
1. மருத்துவ ஒழுக்கநெறிக்கு (ethics )அமைய தன்னின சேர்க்கையாளர்களை அல்லது மத மற்றும் இன ரீதியில் எவரையும் மருத்துவர்கள் பாகுபடுத்த முடியாது . எதிரியாக இருந்தால் கூட நோயாளியாக வந்து மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெற வந்தால் எந்த வித பாரபட்சமும் காட்டப்பட முடியாது அல்லது அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாது.
2. தன்னினச் சேர்க்கையாளரையோ அல்லது ஒரு நோயாளியையோ அடையாளம் காணக்கூடிய வகையில் படங்களை வெளியிட்டு அவரோ அல்லது அதை பார்க்கும் வேறு ஒருவரோ களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவது மருத்துவ மற்றும் ஊடக ஒழுக்க நெறிகளுக்கு முரணானது. படத்தை வெளியிட்டு கருத்து தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரது கண்களை கருப்பு பெட்டி வடிவத்தில் மூடியோ அல்லது அடையாளம் காண முடியாத வகையில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது போல தெளிவற்றதாக்கி வெளியிடப்பட வேண்டும்.
3. தன்னின சேர்க்கை தம்பதிகளின் படத்தை போட்டு மனித உரிமைகளை பாதுகாப்பதாகவும் புதுமைப் புரட்சி செய்வதாகவும் படம் காட்டும் ஐயாமாரே! அம்மையார்களே ! உங்களுடைய குடும்பத்தில் ஒருவர் உங்களுடைய மகன், மகள், தம்பி அல்லது தங்கை யாராவது உங்களிடம் வந்து ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி கேட்டால் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்! அதற்கு அனுமதிப்பீர்களா ? எதற்கு இந்த போலி நாடகம் ? ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே ?
4. ஏற்கெனவே கருவளம் தமிழர்கள் மத்தியில் குறைந்து இருந்தது. கோவிட் உலகளாவிய நோய் தாக்கத்தின் பின்னர் இந்த கருவளம் மேலும் குறைந்துவிட்டதை அண்மைக்கால புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அது ஒருபுறம் இருக்க ஓரினசேர்க்கை தம்பதிகளினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு தந்தை இல்லாத இரு தாயார் அல்லது தாயார் இல்லாத இரு தந்தைகள் கொண்ட சூழ்நிலையில் வளர்வது ஆரோக்கியமானதா ?
5. அரைகுறையாக இந்துசமயம் கற்ற ஒருவர் இந்து சமயத்தில் சிவனும் திருமாலும் இணைந்து ஐயப்பன் உருவாகியதை மறந்து விட்டீர்களா என்று எனக்கு செய்தி அனுப்புகிறார் . ஐயா சைவப் பண்டிதரே! சிவன் இணைந்தது மோகினி அவதாரம் எடுத்த திருமாலே அன்றி அது ஓரின சேர்க்கை அல்ல. மேலும் தெய்வங்கள் ஆண் உருவத்திலும் பெண் உருவத்திலும் நாங்கள் வழிபட்டாலும் அவர்கள் பால்நிலையை கடந்தவர்கள் என்று சைவம் வலியுறுத்துவதையும் கவனத்தில் எடுக்கவேண்டும் . எனவே இயறகைக்கு முரணாக திருமணம் செய்பவர்கள் இந்து சமய புரோகிதர்களை அழைத்து மதத்தை இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வேறு சில மதங்களாக இருந்தால் இப்படி படம் போட்டால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.