வெளிநாட்டவருக்கு எதிரான பொது வாக்கெடுப்பு வரைவு!  மரீன் லூ பென் வெளியிட்டார்

வெளிநாட்டவருக்கு எதிரான பொது வாக்கெடுப்பு வரைவு!  மரீன் லூ பென் வெளியிட்டார்

பிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சித்தலைவி மரீன் லூ பென் அம்மையார் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டுக் குடியேற்றங்களைத் தடுப்பதற்காக மக்கள் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்தப் போவதாகக் கூறி வருகிறார்.

அகதிகளுக்குத் தஞ்சம், வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை, சமூக நல உதவிகள், அகதிக் குடும்பங்கள் ஒன்றிணைதல் போன்றவற்றை இல்லாமற்செய்கின்ற சட்டங்களுக்குப் பிரெஞ்சு மக்களது தீர்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக நடத்தவுள்ள வாக்கெடுப்புத் தொடர்பான ஒரு
வரைவை பாரிஸில் இன்று அவர் செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளைத்தடுப்பதற்கு அவர்களுக்கு எதிராக எந்தெந்த விடயங்களில், எவ்வாறான தலைப்புகளில் மக்களிடம் தீர்ப்புக் கோரப்படும் என்ற விரிவான விடயங்கள்
அந்த வரைவில் அடங்கியுள்ளன.

வேலை வாய்ப்பு, வீட்டு வசதிகள், சமூக நல உதவிகளை வெளிநாட்டவர்கள் உறிஞ்சுவதைத் தடுப்பது - 
பிரான்ஸின் தேசியத்தையும் குடியுரிமைகளையும் பாதுகாப்பது -
அகதிகளாக வந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கு வாய்ப்பாக உள்ள"naturali
zation" என்னும் உரிமையை கடினமாக்குதல் -
குடும்ப நல உதவிகளைப் பிரெஞ்சுக் குடிமக்களுக்கு மட்டும் வரையறை செய்வது -
சில பொதுத்துறைப் பணிகளைப் பிரெஞ்சு மக்களுக்கு மட்டும் ஒதுக்குதல் -
சர்வதேச சட்டங்களை விடவும் பிரான்ஸின் சட்டங்களுக்கே முதலிடம் வழங்குதல் - போன்ற பல திட்டங்களுக்கு அடிப்படையாக சட்ட வரைவு தயாரிக்கப்படவுள்ளது. அதன் மீது சர்வஜன வாக்கெ
டுப்பு நடத்தப்படும் - என்று மரீன் லூ பென் அறிவித்திருக்கிறார்.

தீவிர வலதுசாரிக் கருத்துகளைப் பரப்பி வரும் தொலைக்காட்சி விவாத வல்லுநரும் பிரபல ஊடகவியலாளருமாகிய எரிக் செமூர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருவதால் அவரது செல்வாக்கு, மரீன் லூ பென்னின் கட்சிக்குப் பலத்த சவாலைத் தோற்றுவித்துள்ளது.
எரிக் செமூர் தன்னை இன்னமும் அதிபர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.ஆனாலும் பிரசாரப் பாணியிலான சந்திப்புக்களையும் கூட்டங்களையும் அவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நடத்திவருகிறார்.

அவர் தேர்தலில் போட்டியிட்டால் 13 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று இப்பொழுதே கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எரிக் செமூரின் திடீர் பிரவேசத்தினால் தீவிர வலதுசாரிகளது வாக்குகள் இந்த முறை இரண்டாக உடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் மக்ரோ
னுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகின்ற மரீன் லூ பென்னின் வாய்ப்பு நழுவிப்போக இடமுண்டு என்றும் கருதப்படுகிறது.

2017 தேர்தலில் மக்ரோனுடன் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகிய மரீன் லூ பென் 33.90 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  நாட்டு மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய
இனவாதத் தேசியக் கருத்துக்களை விதைத்துவருகின்ற எரிக் செமூர், போட்டிக் களத்துக்குள் வந்திருப்பதை அடுத்து தேர்தல் பிரசாரங்களில் குடியேற்ற வாசிகள் மற்றும் அகதிகள் தொடர்பான விடயங்கள் கட்சிகளின் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளன.

முஹம்மது போன்ற வெளிநாட்டுப் பெயர்களைப் பிரான்ஸில் தடைசெய்ய வேண்டும் என்று கூறுகின்ற எரிக் செமூரின் கொள்கையை கண்டிக்கின்ற முறையில் கருத்து வெளியிட்டுள்ளார் அதிபர் மக்ரோன்.

"பிரான்ஸின் அடையாளம் (French identity) என்பது முதற் பெயர்களுக்குள் (first name) சுருங்கி விடாது" - என்று மக்ரோன் எரிக் செமூரின் பெயரைக் குறிப்பிடாமல்-அவரைச் சாடும் வகையில் - கருத்துத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4