இணைய விளையாட்டுகளை உடன் தடைசெய்யுங்கள்;-TRCயிடம் கோரிக்கை
இணைய விளையாட்டுகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மகளிர் அமைப்பு ஒன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. "
“லக்மவ தியனியோ” என்ற அமைப்பு, அதன் பாதகமான விளைவுகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரியங்கா கொத்தலாவல தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தலையிட்டு நமது குழந்தைகளை இந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது. ஏனென்றால் அவர்களால் ஆன்லைன் விளையாட்டுகளை தடைசெய்ய முடியும்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அதிகாரிகளை வலியுறுத்துகிறோம். நம் குழந்தைகள் - நமது தேசத்தின் எதிர்காலம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்த 16 வயது சிறுவன் அண்மையில் பண்டாரகம பகுதியில் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.