இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் 7,096 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா, கஸகஸ்தான், ஜேர்மன், யுக்ரேன், சீனா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் 45,413 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்,அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் விசேட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தில் இதுவரை பதிவு செய்யாத ஹோட்டல், தங்குமிடம் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்கள் இப்போது ஆணையத்தில் பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக சுற்றுலா அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.