காணாமல்போன பொலிஸ் அதிகாரி 51 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு
கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த பொலிஸ் சார்ஜன், கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் மகன் சடலத்தை அடையாளம் காண்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை வைத்தியசாலையிலுள்ள நீர் தாங்கியை சுத்திகரிக்கும் நோக்கில் நீர் தாங்கியை பார்வையிட்டபோது சடலமொன்று இருப்பதை அவதானித்த சிற்றூழியர்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அறிவித்துள்ளனர்.
வைத்தியசாலை ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சடலம் இன்று (29) பொலிஸாரால் மீட்கப்பட்டது.
கம்பளை நீதவான் சிறீநித் விஜேசேகர முன்னிலையில் சடலம் மீதான நீதவான் விசாரணைகள் இடம்பெற்றன.
நீர் தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜனாக கடமையாற்றிய எஸ். இளங்கோவன் கடந்த செப்டம்பர் மாதம் 08 திகதி காணாமல் போயிருந்தார்.
நெஞ்சு வலி காரணமாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளங்கோவன், அன்றைய தினமே காணாமற்போயிருந்தார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயதான பொலிஸ் சார்ஜனை தேடும் பணிகளை விசேட பொலிஸ் குழுக்கள் மூலம் பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.
சம்பவம் தொடர்பில் கம்பளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.