இன்றைய வேத வசனம் 31.10.2021
(இந்தக் தகவல் பிடித்தவர்கள் அல்லது பிடிக்காதவர்கள் உங்கள் கருத்துக்களை, அனுபவங்களை கீழே உள்ள COMMENTS இல் பதிவுசெய்யுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள்)
திருமண வீடுகளில் பதட்டத்தை அதிகமாய் நீங்கள் காணலாம். அங்கும், இங்கும் ஓயாமல் ஓடுவதும், செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் மறந்துவிடுவதும், பதறிப் பேசுவதும், அவசர நேரத்தில் குறுக்கே யாரும் வந்து விட்டால், எரிந்து விழுவதும், சாதாரணமானவை.
"தந்தி" என்று போஸ்ட்மேன் குரல் கொடுத்தவுடன், அநேகருடைய இருதயம் பதறிப் போகும். சிலருக்கு உடனே பேதி ஆரம்பித்துவிடும். எதுவோ, என்னவோ என்று அலைமோதி அங்கலாய்த்துக் கொள்வார்கள். இப்போது "தந்தி" முறை ஓய்ந்து போய்விட்டது.
சிலருக்கு "கடுஞ்சொற்கள்" பதட்டத்தை உண்டுபண்ணும். கோபம் கண்ணை மறைக்கும். என்ன பேசுகிறோம் என்கிற நிதானமில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பதட்டமாய் பொரிந்து தள்ளிவிடுவார்கள். இதனால் அநேக குடும்பங்கள் உடைந்து போனதுண்டு.
ஏன் இந்தப் பதட்டம்? நம் சத்திய வேதம் திட்டமாய்ச் சொல்கிறது "விசுவாசிக்கிறவன் பதறான்." (ஏசாயா 28:16).
நீங்கள் பதறுகிறீர்கள் என்றால், உங்களை நேசிக்கிற கர்த்தர் மேல் உங்களுக்கு விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்.
அவர் சகலத்தையும் உங்கள் நன்மைக்காகவே செய்தாருளுவார் என்று, திட்டமாய் விசுவாசியுங்கள். (ரோமர் 8:28)
ஆத்திரமும், அவசரமும், கோபமும் உங்கள் உள்ளத்தில் பொங்கிக் கொண்டு வரும்போது சிலுவை நாயகரின் பொறுமையை உங்கள் கண்களின் முன் கொண்டு வாருங்கள்.
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், (1 பேதுரு 5:8).
யோவான் 14:1உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
ஆமென்.