அனுமதி மறுக்கப்பட்ட சீனக்கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது எவ்வாறு?
இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சீனக் கப்பலான ஹிப்போ ஸ்பிரிட், இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளமையை கடல்சார் போக்குவரத்து இணையதளங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்தியை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.
தொன் கணக்கில் நிராகரிக்கப்பட்ட சீன உரங்களை ஏற்றிச் செல்லும் ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக ஊடக அறிக்கைகள் கூறினாலும், இலங்கை துறைமுக அதிகாரசபை துறைமுக மாஸ்டர் கேப்டன் கே.எம். நிர்மல் பி. சில்வா இதனை நிராகரித்தார்.
சேதன உரத் தொகுதியை ஏற்றிய குறித்த கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், கப்பல் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த அதிகாரசபையின் அதிகாரி, கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்தாலும் இது சட்டவிரோதமானது அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மாத்திரமே இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பை கண்காணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி 20,000 மெற்றிக் தொன் கரிம உரங்களை ஏற்றிக்கொண்டு ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் சீனாவின் கிங்டாவ் துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டது. ஆனால் இந்த உரக் கப்பலின் மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதால் கப்பல் சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
சீனாவுக்குத் திரும்பாத ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்குச் செல்வதாக அறிவித்து சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டது.
ஆனால் இம்மாதம் 14ஆம் திகதி கப்பலைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்ட தானியங்கி அடையாள அமைப்பு (AIS)) மலாக்கா ஜலசந்தியில் செயலிழக்கச் செய்யப்பட்டது. Seiyo Explorer என்ற பெயரில் ஹிப்போ ஸ்பிரிட் கப்பலை இம்மாதம் 24ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் உள்ளதாக இணையத்தில் கிடைக்கும் தரவுகள் காட்டுகின்றன.
ஹிப்போ ஸ்பிரிட் மற்றும் சீயோ எக்ஸ்ப்ளோரர் இரண்டும் ஒரே IMO எண்ணைப் பகிர்ந்து கொள்கின்றன. எனவே ஹிப்போ ஸ்பிரிட் தான் Seiyo எக்ஸ்ப்ளோரர் என்பதை உறுதிப்படுத்த முடியும்.
IMO கப்பல் அடையாள எண் என்பது ஒரு தனித்துவமான ஏழு இலக்க எண்ணாகும். இது ஒரு கப்பலின் வாழ்நாள் முழுவதும் மாறாமல் இருக்கும் மற்றும் பெயர்கள், கொடிகள் அல்லது உரிமையாளர்களின் எந்த மாற்றத்தையும் பொருட்படுத்தாமல் அதன் மேலோடு இணைக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அப்பால் இலங்கையின் கடற்பரப்பில் கப்பல் காணப்பட்ட போதிலும், கண்காணிப்பு அமைப்புகளில் கப்பல் வரம்பிற்கு அப்பால் சென்றுள்ளது.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை (31)இ கப்பல் இலங்கைக் கடலுக்குள் நுழைந்து தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ளதாக கடல் போக்குவரத்து இணையத்தளங்கள் உறுதிப்படுத்தின.