மேல் மாகாணத்தில் போதைக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் 37 பேரா? -விசாரணைக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவு
மேல் மாகாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 37 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுறுசுறுப்பாக கடமையாற்றுவதாக பொலிஸ் தலைமையகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இவர்களில் 28 அதிகாரிகள் கொழும்பு பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் எனவும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுவது பாரிய பிரச்சினை எனவும், அவர்களை விரைவில் இனங்கண்டு புனர்வாழ்வளிக்க வேண்டுமெனவும் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையான ஏனைய மாகாணங்களில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.