புலமைப்பரிசில், சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி!
ஐந்தாம் தரம் புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆறு மாதங்களின் பின்னர் தரம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 08 ஆம் திகதி க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைய ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் க.பொ.த உயர்தர பரீட்சை 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை 2022 மே 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 ஜூன் முதலாம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.