சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்(Photo)
சபுகஸ்கந்த, மாபிம பகுதியில் சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
44 வயதான மொஹமட் சச்சி பாத்திமா மும்தாஸ் என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைகளைக் கொட்டும் இடமொன்றில் கைவிடப்பட்டிருந்த சூட்கேசில் கைகள் கட்டப்பட்டு நேற்றைய தினம் குறித்த சடலம் மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறிய உதவுமாறு காணாமல் போன பெண்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளவர்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்தனர்.
இதற்கமைய இன்றைய தினம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளனர்.
கடந்த 29ஆம் திகதி முதல் தனது மனைவி காணாமல் போனதாக அவரது கணவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த பெண் சூதாட்ட விடுதிகள் உள்ள இடங்களுக்குச் சென்று நஷ்டமடைந்தவர்களுக்கு அதிக வட்டிக்குப் பணம் வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காணாமல் போகும் போது பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கம் அணிந்திருந்தமை தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ராகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலத்தில் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.