அரிசிக்கு பதில் மரவள்ளி கிழங்கை மக்கள் சாப்பிட வேண்டும்- இலங்கை மந்திரி பேச்சால் சர்ச்சை
இலங்கையில் உணவு தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக அரிசி தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். உணவு பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் அரிசிக்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை மக்கள் சாப்பிட வேண்டும் என்று இலங்கை மந்திரி கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இலங்கை நாட்டின் நீர் பாசனத்துறை அமைச்சரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்சே நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது நாட்டில் அரிசி தட்டுப்பாடு நிலவி வருகிறது என்பதை ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறும் போது, ‘இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் மரவள்ளிக்கிழங்கு மற்றும் பாசிப்பயிறை சாப்பிட வேண்டும் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறும்போது, ‘இலங்கை 2023-ம் ஆண்டில் கடுமையான பட்டினியை எதிர்நோக்கும் என்பதையே மந்திரி சமல் ராஜபக்சேவின் பேச்சு வெளிப்படுத்துகிறது’ என்றார்.
மேலும் 1970 முதல் 1977-ம் ஆண்டு வரையிலான சிறிமாவோ பண்டாய நாயக்கே பிரதமராக பதவி வகித்த காலக்கட்டத்தில் கடுமையான உணவு பஞ்சத்தால் மக்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் மக்கள் எதிர்கொண்ட அந்த மோசமான அனுபவத்தை மந்திரியின் பேச்சு நினைவுப்படுத்துகிறது என்றும் பல எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.