ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை
கனமழை காரணமாக 9 ஆற்றுப்படுகைகளை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெந்துரு ஓயா, மஹா ஓயா, அத்தனகல்லு ஓயா, களனி கங்கை, களுகங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை மற்றும் கலா ஓயா ஆகிய ஆற்றுப் படுகைகளைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (08), நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) ஆகிய நாட்களில் கணிசமான வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும் மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் அபாயம் உள்ளது.
இதேவேளை, மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.