13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

Nila
2 years ago
13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

அழகான ரிஷபராசியினரே.. சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட உங்களின் ராசிக்கு எட்டு, பதினொன்றாம் அதிபதியான குரு பகவான் பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார். ஒன்பதாமிடத்தில் சனி ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் நிற்கிறார்கள்.

பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருக்கும் குரு பகவான் அஷ்டமாதிபதி வேலையைச் செய்வாரா? லாபாதிபதி வேலையைச் செய்வாரா? அஷ்டமாதிபதியாகி தொழில் ஸ்தானத்திற்கு செல்வதால் தொழிலில் இடர் ஏற்படுமோ? லாபாதிபதி தொழில் ஸ்தானத்திற்கு செல்வதால் தொழில் லாபம் கிடைக்குமா?

பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகுமோ?அப்பப்பா ரிஷப ராசியினருக்கு குரு தொழில் ஸ்தானத்திற்கு செல்வதால் எத்தனை சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். அஷ்டமாதிபதி மற்றும் லாபாதிபதி குரு பத்தாமிடத்திற்கு செல்வது சுபம் அல்ல. குரு பகவான் தான் நின்ற இடத்தை விட பார்வை படும் இடங்களை புனிதப்படுத்துவார் என்பது ஜோதிடவிதி. அதன்படி குருவின் பார்வை பதியும் இரண்டு, நான்கு, ஆறாம் இடங்கள் மூலம் ரிஷப ராசியினர் சுப பலன்கள் பெறுவது உறுதி. அதே நேரத்தில் பத்தில் நிற்கும் குரு தொழிலை ஒரு மனிதன் எப்படி தக்க வைத்துக் கொள்வது என்ற செப்படி வித்தையை உங்களுக்கு நிச்சயம் கற்பிப்பார்.

தசம குருவின் பலன்கள்: பத்தாமிட குரு புதிய தொழில் வாய்ப்பையும், மேன்மையையும், எதிர்பாராத தொழில் மாற்றத்தையும் கொடுப்பார். அதன் மூலம் கம்பீரம், கவுரவம், அந்தஸ்து, மிடுக்கான தொழில் தோரணையையும் கொடுப்பார். தொழிலுக்கு மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசாபுத்தி நடப்பவர்களுக்கு லாபாதிபதி என்பதால் பல்வேறு வழிகளில் அதிர்ஷ்ட வருமானத்தையும் பெருக்குவார்.

குரு அஷ்டமாதிபதி என்பதால் மறைமுக லாபம் ஈட்டும் எண்ணத்தையும் ஏற்படுத்துவார். அல்லது லாபத்தை குறைத்து கணக்கு காட்டும் குறுக்கு சிந்தனையை புகுத்துவார். சாதகமற்ற தசா புக்தி நடப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். தொழில் கூட்டாளிகள் பிரிந்து செல்வார்கள். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கும்.

உத்தியோகத்தில் ஸ்திரத் தன்மை ஏற்படும். குடும்ப சூழ்நிலை காரணமாக பொருத்தமில்லாத வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கும் திறமைக்கும், படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட மன வருத்தம் பய உணர்வு நீங்கும். வெகு சிலருக்கு குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும். உடன் வேலை பார்ப்பவர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி வரும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் கை கூடி வரும்.

பத்தாமிடம் என்பது கர்மஸ்தானம் என்பதால் குடும்பத்தில் நடைபெறும் கர்ம காரியங்களில் கலந்து கொள்வதில் தடை ஏற்படும். முறையாக நீத்தார் கடன் செய்ய முடியாதது போன்ற அசௌகரியங்கள் இருக்கும்.

ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். வாக்கு தோஷம் நிவர்த்தியாகும்.வாக்கு வன்மை அதிகரிக்கும். சதா எதையாவது பேசிக்கொண்டே இருப்பவர்கள் கூட அமைதியை விரும்புவார்கள்.

நியாயம், தர்மம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். பிரிந்த குடும்ப உறவுகள் நடந்ததை மறந்து கூடி மகிழ்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும் ஆடம்பர விருந்துகளும் நடந்து கொண்டே இருக்கும். நல்ல விதவிதமான உணவு சாப்பிடும் யோகம் உண்டாகும். பேச்சைத் தொழிலாக கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் பணமாக காய்க்கும்.

பணப் பற்றாக்குறை அகலும். கையில் ஐந்து ரூபாய் பணம் இல்லாமல் ஆரம்பித்த சுப காரியங்கள் வெகு விமரிசையாக, ஆடம்பரமாக நடக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வேண்டிய பொருள் வரவு தேடிவரும். கண்களிலுள்ள குறைபாட்டை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற காலம். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், அன்றாடம் அழியக்கூடிய பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை நான்காமிமான சுக ஸ்தானத்திற்கு பதிகிறது. ஆரோக்கிய கேடு நீங்கும். தாயின் ஆரோக்கியம் சீராகும். தாயுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். தாய் வழிச் சொத்து பாகப் பிரிவினையில் இருந்த சர்ச்சைகள் நீங்கி முழுப் பங்கும் தாயின் பெயருக்கு மாறுதலாகிவிடும். பல வருடங்களாக விற்க முடியாமல் பயன்படுத்த முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பல லட்சங்களாக மாறும்.

வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் குடியிருக்கும் வீட்டையே சகாய விலைக்கு வாங்குவார்கள். புதிய வாகனம் யோகம் உண்டு. பழைய வாகனம் வைத்திருப்பவர்கள் புதிய வாகனம் வாங்குவார்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வாடகைக்கு போகாமல் கிடந்த அசையும் அசையாச் சொத்துக்கள் நல்ல வாடகை தாரர்கள் கிடைப்பார்கள். ரிஷப ராசி விவசாயிகளுக்கு நிலம் பொன் விளையும் பூமியாகும். நீர்ச் சத்து நிறைந்த காய்களை பயிரிடும் விவசாயிகளுக்கு மகசூல் அதகரிக்கும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு மகத்தான வருமானம் உண்டு. போரிங் போட, கிணறு வெட்ட சாதகமான நேரம்.

கல்லூரி பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ - மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடர்வார்கள். ஏழில் கேது இருப்பதால் நண்பர்களின் சகாவாசத்தால் வீண் வம்பு, வழக்கை தவிர்க்கவும். படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்: ராசிக்கு ஆறாம் இடத்தில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் சுப நிகழ்விற்குத் தேவையான பொருளாதாரத்தை கடனாக பெற்றுக் கொடுப்பார். திருமணம், கல்வி, அசையும், அசையாச் சொத்து, தொழில் முன்னேற்றத்திற்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும்.

சிலருக்கு தீராத கடன் மற்றும் வட்டி தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். தொழில் சரிவால் தலைமறைவாகலாம் என்று நினைத்தவர்கள் கூட புதிய கடன் வாங்கி பழைய கடனை சமாளிப்பார்கள். கடனையும் வட்டியையும் நினைத்து பயந்து நோயை வரவழைத்தவர்களுக்கு கடனை அடைக்கும் மார்க்கம் தென்படும். நீண்ட நெடுங்காலமாக சிகிச்சை செய்து வந்த கட்டுக்கடங்காத நோயின் பாதிப்பு குறையும். உங்களை அவ்வப்போது சீண்டி வந்த உற்றார் உறவினர்கள், எதிரிகள் கண்டும் காணாது போல் சென்று விடுவார்கள்.

குரு நின்ற மற்றும் பார்வை பெறும் இடங்களால் பல சாதகங்கள் நடைபெறும் சாத்தியக்கூறுகள் இருந்தாலும் ராசியில் உள்ள ராகுவும் ஏழில் நிற்கும் கேதுவும் சுப பலன்களை தட்டிப்பறிப்பார்கள்.

ராசியில் நான்காம் அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் மனக் குழப்பம், பய உணர்வு, கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, செரிமானக் கோளாறு சிறுசிறு உடல், மனரீதியான பாதிப்பு இருக்கும். வீண் பழி, நடத்தையின் மேல் களங்கம் தீய வழியில் பொருளீட்டும் சிந்தனை, உடன் பிறந்த பெண்கள் மூலம் தேவையில்லாத மனக்கசப்பைத் தரலாம். என்பதால் அதிக கவனம் தேவை.

ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் இருப்பதால் சுய ஜாதக ஏழாமிட வலிமை மற்றும் தசா புக்திக்கு ஏற்ப திருமணத்தை முடிவு செய்வது நலம்.

ஏழில் பிரிவினையை மிகைப்படுத்தும் கிரகமான கேது இருப்பதால் தொழில், உத்தியோக நிமித்தமாக, கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளை பிரித்து வாழ வைப்பார். நீண்ட நெடுங்காலமாக முடியாமல் இருந்த விவாகரத்து வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு மிகுதியாகி கூட்டுத் தொழில் உடையும். கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் சகோதரர்கள் தொழிலை பிரித்து தனிக் குடித்தனம் செல்வார்கள். பிறரை நம்பிச் செய்த முயற்சிகளில் நல்ல முடிவு ஏற்படாது.

ஏழாமிட கேது அரசியல்வாதிகளை தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியால் அவமானம் தந்து கட்சி மற்றும் பதவியிலிருந்து நீக்கச் செய்வார். தன்னலமற்ற பொதுச் சேவையை பிறருக்காகச் செய்யும் போது அனைத்தும் பரிபூரணமாக முடிந்து பாராட்டு கிடைக்கும். இதையே சுய நலனுக்காக செய்யும் போது வம்பு வழக்கும் குற்றமும் பதிவாகும். எனவே எந்த செயலையும் ஒரு முறைக்கு பல முறை திட்டமிட்டு செயல்பட வேண்டும். தினமும் வம்பு, வழக்கு என அலைந்து அரசியல் வாழ்க்கையே வெறுக்கும்.

பெண்கள்: பல பெண்கள் அரசின் ஆதரவு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். தாய்வழிச் சொத்து பாகப் பிரிவினையில் தாயின் ஆதரவு குறையலாம்.

ஏழில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் வாழ்நாள் வசந்தமாகும். ஏற்றம், இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை தசம குரு உங்களுக்கு கற்றுத் தருவார். எனினும் 5 மாத காலம் மட்டுமே குரு கும்பத்தில் இருப்பார் என்பதால் கண் இமைக்கும் முன்பு அடுத்த குருப் பெயர்ச்சி வந்து விடும். மேலும் பாக்கியாதிபதி சனி ஆட்சி பலம் பெற்று இருப்பதும் உங்களுக்கு சாதகமே.

பரிகாரம்: தினமும் திருக்கோளாறு பதிகம் படித்து வர பாதிப்புகள் வெகுவாக குறையும். முறையான துர்க்கை வழிபாடு ஜென்ம ராகுவின் தாக்கத்தை குறைத்து சுப பலனை மிகுதிப்படுத்தும். மேலும் பிரிந்த தம்பதியினரை சேர்த்து வைப்பதுடன் இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை செவ்வாய் கிழமை காலை 8--9 மணிக்குள் வழிபாடு செய்துவர நல்ல மாற்றம் உடனே தெரியும். ரிஷப ராசி அரசியல் பிரமுகர்கள் சத்ரு தொல்லையில் இருந்து விடுபட அமாவாசை நாட்களில் பிரித்தியங்கரா தேவியை வழிபட வேண்டும்.