13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

Nila
2 years ago
13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

புத்தி சாதுர்யம் நிறைந்த மிதுன ராசியினரே இதுவரை ராசிக்கு எட்டாமிடமான மகரத்தில் நின்ற குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடமான கும்பத்திற்கு செல்கிறார். சனி பகவான் எட்டாமிடத்தில் நிற்கிறார். அஷ்டமத்துச் சனி. ராகு பகவான் பன்னிரன்டாமிடத்திலும் கேது பகவான் ஆறாமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஒன்பதாமிட குருவின் பலன்கள் அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு. இந்த ஜோதிடப் பழமொழியும் தற்போதைய கோட்சார நிலவரங்களும் மிதுன ராசிக்கு மிகப் பொருந்தும்.

அஷ்டமத்து சனி என்றால் ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோட்சார சனி சஞ்சாரம் செய்வதாகும். அஷ்டமச் சனி காலத்தில் “நட்டதெல்லாம் பாழ், விழலுக்கு இரைத்த நீர், அந்நிய தேசத்திற்கு ஓடிப் போ” என்றெல்லாம் சொல்வார்கள். அதாவது இதன் பொருள் அஷ்டமத்து சனியின் காலத்தில் புத்தி வேலை செய்யாது. உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.சொந்த ஊரில் இருந்தால் வீண் பிரச்சினைக்குள் சிக்குதல், பழிக்கு ஆளாகுதல் போன்றவை ஏற்படும். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவார்கள். காரணமே இல்லாமல் தண்டனை அனுபவிப்பார்கள்.

சிலர் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார்கள். தேவையே இல்லாமல் சிறைக்கு போவார்கள். 2 வருடம் கழித்து அவர் மீது தவறில்லை என்று தெரியவரும். இதனால் தான்“அகப்பட்டவனுக்கு அஷ்ட மத்து சனி” என்ற பழமொழி உள்ளது. இரண்டரை வருடம் அஷ்டமத்து சனி வந்து போனவர்கள், நிதானமாக, யதார்த்தமாகப் பேசுவார்கள். ஞானி போல பேசுவார்கள். அந்த அளவிற்கு சனி அவர்களை கசக்கி பிழிந்து காய வைத்து விட்டு போய் விடும். சொந்த ஊரை சொந்த பந்தங்களைவிட்டு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு செல்வது சிறை தண்டனைக்கு இணையாகும். ஆனால் வீண் பழி நீங்கி புகழ் கிடைக்கும்.

ஓடி போனவனவர்களுக்கு ஒன்பதில் குரு இருக்குமென்று நமது ஜோதிட முன்னோர்கள் கூறியது நிதர்சனமான உண்மை. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பதாமிடம் என்பது வெளி நாட்டு பயணத்தைப்பற்றிக் கூறுமிடம். லக்கினத்திற்கு இரண்டாமிடம் குடும்ப ஸ்தானம்.நான்காமிடம் வசிக்கும் வீட்டை குறிப்பிடும். இரண்டாமிடத்திற்கு எட்டாமிடம் ஒன்பதாமிடமாக வரும். நான்காமிடத்திற்கு ஆறாமிடமாக ஒன்பதாமிடம் வரும்.

ஆக ஒன்பதாம் வீடு என்பது குடும்பஸ்தானத்திற்கு குழப்பத்தை தரும் எட்டாமிடமாகவும், குடியிருக்கும் வீட்டிற்கு எதிர்ப்பை தரும் ஆறாமிடமாகவும் ஒன்பதாம் வீடு வருவதால் ஒன்பதாமிடத்தில் நிற்கும் கிரகங்களின் தசாபுத்தி காலகட்டங்களில் தொழில் நிமித்தமாக அல்லது குடும்பத்தில் குழப்பம் காரணமாக சொந்த ஊர் அல்லது வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். மேலும் ஒன்பதாமிடம் என்பது தந்தையைப் பற்றிக் கூறுமிடம். ஒன்பதாம் பாவகத்திற்குரிய காரக கிரகம் குரு. காரக கிரகமான குரு பாவகத்தில் நிற்கும் போது காரககோ பாவக நாஸ்தி ஏற்படுவதால் ஒன்பதில் குரு இருந்தால் ஜாதகர் தந்தையுடன் இருப்பதை பிரித்து விடுவார். அத்துடன் ஒன்பதாம் பாவம் கெட்டு விடுவதால் பூர்வீகத்தில் இருக்கும் வாய்ப்பு குறைந்து பரிபூரண அயல்நாட்டு யோகத்தை கிடைத்து விடுகிறது.

காரக நாஸ்தி என்பது ஒன்பதாம் பாவகத்தின் உறவு காரகத்தை மட்டும் தான் பிரிக்கும் அல்லது பாதிக்கும்.உறவற்ற காரகத்தை எந்த ஒரு காரக கிரகமும் காரகோ பாவ நாசத்தை செய்வதில்லை. ஆக ஒன்பதுல குரு இருந்தா சொந்த ஊரு அல்லது சொந்த நாட்டுல இருந்தா முன்னேற்றம் அடைய முடியாது அதனால் உறவுகளை விட்டு ஓடி போனால் மட்டும் தான் முன்னேற்றம் என்பதை நம்ம முன்னோர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்.

கால புருஷ ஒன்பதாம் அதிபதியாக குரு இருப்பதால் ஒன்பதாமிடத்தில் குரு இருப்பவர்கள் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் சென்று வசிக்கும் போது பாதகம் குறைந்து சாதகம் மேலோங்கும். ஆக அஷ்டமச் சனியும், ஒன்பதாமிட குருவும் மிதுன ராசியினருக்கு இடப் பெயர்ச்சியைத் தர முடிவு செய்து விட்டார்கள். அஷ்டமச் சனி நடக்கின்ற எல்லா மிதுன ராசியினரும் இடம் பெயர நேராது. ஜனன கால ஜாதகப்படி எட்டு, ஒன்பது மற்றும் பன்னிரன்டாம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புத்தி நடப்பவர்களுக்கு மட்டுமே வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல நேரலாம்.

மிதுனத்திற்கு குரு ஏழு மற்றும் பத்தாம் அதிபதி என்பதால் தொழில் மற்றும் திருமண வாழ்க்கை தொடர்பான அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு கொடுப்பார். ஒன்பதாமிட குருவின் பார்வை பதியும் இடங்களான ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய இடங்கள் அஷ்டமச் சனியால் ஏற்படும் இன்னல்களை வெகுவாக குறைக்கும்.
அஷ்டமச் சனியின் காலம் என்பதால் தொழிலில் அதிக முதலீடு செய்யக் கூடாது. பரம்பரையாக கூட்டுக் தொழில் செய்பவர்களுக்கு தொழில் கூட்டு பிரியும். அண்ணன் தம்பிகள் தொழிலை பிரித்து பூர்வீகத்தை விட்டு இடம்பெயர நேரும்.

உத்தியோகத்திலிருந்த இடர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளிப்பார். உடல் நலம் சீராகும். கடனை நினைத்து பயந்து வந்த நோய் தொல்லை குறையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைத்து நிம்மதி அடைவீர்கள். உடன் பிறப்புகள் மற்றும் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு விருப்ப ஓய்வு கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட பண வரவு கிடைக்கும். சிலர் வீட்டிற்கு தெரியாமல் இரண்டாம் திருமணம் செய்வார்கள். இளைய மனைவி மூலம் சொத்து பொருள் சேர்க்கை உண்டாகும்.

இடது கண்ணில் பார்வை குறைபாடு வரும். வயது முதிர்ந்தவர்களுக்கு மறுபிறவி, மோட்சம் பற்றிய எண்ணம் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். வரவுக்கு மீறிய செலவால் மன சஞ்சலம் மிகுதியாகும். ஒரு சிலருக்கு மருத்துவ மனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரலாம். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். பெரிய தொழில் முதலீடுகளை தவிர்க்க வேண்டும்.

தொழில் நிமித்தமாக வெளிநாடு சென்று திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்படும். வயது முதிர்ந்தவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகளின் வீட்டிற்கு சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் திருமணத்தை சுய ஜாதகரீதியான தசாபுத்திக்கு ஏற்ப முடிவு செய்வது உத்தமம். கலைத்துறையினருக்கு சாகமும், பாதகமும் கலந்து நடக்கும்.

ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு இருப்பதால் திருஷ்டி தோஷம் விலகும். ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். தெய்வ அனுகிரகம் உண்டாகும். வாழ்நாள் கனவு லட்சியம் ஈடேறும். கவுரவப் பட்டங்களும், பதவியும் தேடிவரும்.
உங்களின் செயல்பாடுகளில் வேகமும், விவேகமும் கலந்து இருக்கும். உற்சாகம் அதிகரிக்கும். உடலுக்கு, ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும். மந்த தன்மை விலகும். ஆரோக்கியம் சீராகும். ஆயுள் குற்றம் நீங்கும். வைத்தியம் பலன் தரும். பரம்பரை வியாதிகளான சுகர், பிபி,போன்றவைகள் கட்டுக்குள் இருக்கும். காரிய சித்தி உண்டாகும். மனம் ஆழ்ந்த சிந்தனையில் லயிக்கும். உள்ளுணர்வு சிறப்பாக செயல்படும். ஆழ்மன எண்ணங்களை சீராக்கும் உடல் பயிற்சிகள், யோகாசனம் போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும்.நினைத்த காரியத்தை நினைத்தபடியே நடத்தும் ஆற்றல் உருவாகும். மொத்தத்தில் குரு யதார்த்தத்தையும், பக்குவத்தையும் உணர வைப்பார்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை ராசிக்கு மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் சகாய ஸ்தானத்தில் பதிகிறது. சொத்துப் பத்திரத்தின் வில்லங்கத்தினால் சகோதரர்களுக்குள் இருந்த ஒற்றுமைக்குறைவு விலகும். வழக்குகள் சாதகமாகும். ஆன்மாவை துன்புறுத்திய மன வேதனைகள் நீங்கும். எதையும் தாங்கும் தைரியம், புதுத்தெம்பு உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். கை மறதியாக வைத்த சொத்து தொடர்பான ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும்.

உயில் எழுதலாம். உயில்கள், சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களில் திருத்தம் செய்யலாம். அடமானத்தில் இருக்கும் நகைகள் மீண்டு வரும். தொலைந்த நகைகள் மீண்டும் கிடைக்கும். வேலையாட்களால் ஏற்பட்ட அசௌகரியம் குறையும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். காது மூக்கு தொண்டைப்பிரச்சனைகள் சீராகும். அந்த பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்ற காலம். சிறு தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பு கிடைக்கும். தடைபட்ட அதிர்ஷ்டம் துளிர் விடும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் குறையும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என பிள்ளைகளைப் பற்றிய அனைத்து மனக்குறையும் தீரும். பள்ளி குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். தன் நம்பிக்கையும் தைரியமும் கூடும். இளங்கலை மற்றும் முதுகலை படிக்க விரும்பிய கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கும்.

தவறான காதல் நட்பிலிருந்த பிள்ளைகள் மனம் மாறி குல கௌரவத்தை காப்பார்கள். செயற்கை கருத்தரிப்பை நாடி மனம் நொந்தவர்களுக்கு இயற்கையாகவே புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்ய ஏற்ற காலம். குரு மற்றும் சனியின் பார்வை 5--&ம் இடத்திற்கு இருப்பதால் அரசியலில் நிலையான பதவி இல்லாதவர்களுக்கு நிலையான பதவி கிடைக்கும்.

பெண்கள்: பாக்கிய ஸ்தான குருவால் கணவரின் ஆயுள், ஆரோக்கிய குறைபாடு சீராகும். பணி நிரந்தரமும் பதவி உயர்வும் மகிழ்சியை தரும். இடப் பெயர்ச்சி மன வருத்தத்தை தரும். தாய், தந்தையிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். பூர்வீகச் சொத்து எந்த வித எதிர்ப்பு மின்றி கிடைக்கும். இன்பச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். விரும்பியவற்றை வாங்கி கொடுத்து உங்கள் கணவர் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். தம்பதிக்குள் அன்பு அதிகரிக்கும். கணவன், மனைவி உறவின் மகத்துவத்தை உணரும் காலம்.

பாக்கிய குரு உங்களின் எதிர்மறை எண்ணங்களை களைந்து உங்களை புனிதராக்கப் போகிறார். அஷ்டமச் சனி முடிந்தால் அனைத்து இன்னல்களும் குறைந்து நிம்மதி பிறக்கும். தன்நம்பிக்கை மிக அவசியம்.

பரிகாரம்: மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.