13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

Nila
2 years ago
13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

சந்திரனின் ஆசி பெற்ற கடக ராசியினரே இதுவரை ராசிக்கு ஏழாம் இடத்தில் நின்ற குரு பகவான்அதிசாரத்தில் ராசிக்கு எட்டாம் இடத்திற்குச் செல்கிறார். சனி பகவான் ஏழாம் இடத்திலும் ராகு பகவான் பதினொன்றாம் இடத்திலும் கேது பகவான் ஐந்தாம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

அஷ்டம குருவின் பலன்கள்: கடகத்திற்கு குரு ஆறு மற்றும் ஒன்பதாம் அதிபதி.ஆறாம் அதிபதி எட்டாம் இடத்தில் மறைவது சிறப்பு. ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் மறைவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். 9-ம் அதிபதி 8ல் மறையும் போது பாக்கிய பலன்கள் மட்டுப்படும்.

ஆறாம் அதிபதி எட்டில் மறைவதால் திடீர் அதிர்ஷ்டம், விபரீத ராஜ யோகம் எதிர்பாராத பண வரவு வேற்று மத, இன நண்பர்கள் மூலம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். மனைவி மூலம் அதிர்ஷ்ட சொத்து கிடைக்கும். சிலர் அழகு ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளிடமிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அன்பும் ஆதாயமும் கிடைக்கும்.

நோயின் தன்மை புரியாமல் அவதியுற்றவர்களுக்கு மாற்று மருத்துவத்தின் மூலம் நோய் தொல்லை தீரும். கணுக்கால் மற்றும் மூட்டு வலிக்கு செய்யும் சிகிச்சைகள் நல்ல பலன் தரும். மன சஞ்சலத்தை ஏற்படுத்தி வந்த கோர்ட் பிரச்சனைகள் சாதமாகும். நல்ல அனுபவமுள்ள பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் பொருள் ஆதாயம் உண்டு. கலைத் துறையினர் ஏற்றம் பெறுவார்கள். கடன் தொல்லை முற்றிலும் அகலும். திருட்டுப் போன பொருள் கிடைக்கும்.

மந்தமாக இருந்த தொழில் சூடு பிடிக்கும். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனத்தை தன ஸ்தானத்தில் பதியும் குருவின் பார்வை கொண்டு வந்து சேர்க்கும். ஏழாமிட சனி புதிய தொழில் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் தருவார்.

புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும்.அஷ்டம குரு என்பதால் பகல் இரவு பாராது அதிக நேரம் உழைக்க நேரும். நட்பு வட்டம் பெரிதாகும். வம்சாவளியாக பூர்வீகத்தில் தொழில் செய்பவர்களுக்கு எட்டாமிட குருவால் வியாபாரத்தில் சிறு பின்னடைவு ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. அஷ்டம குருவின் காலம் என்பதால் யாரையும் நம்பி பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது. அதே நேரத்தில் அஷ்டம குருவின் பார்வை இரண்டாம் இடத்திற்கு இருப்பதால் பேச்சுத் திறமையால் பல காரியங்களை சாதித்துக் கொள்வர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.

முதலாளி, தொழிலாளர்களிடையே சிறு சிறு பிணக்குள் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் சில மாற்றங்களும் ஏற்றங்களும் வரும். ஒரு சிலருக்கு மன வருத்தத்தை தரும் பிரச்சனைகளும் வந்து சேரும். உடன் வேலை பார்ப்பவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை அனுபவிக்க நேரும்.போட்டி பொறாமைகளை எதிர் கொள்ள வேண்டிய காலம். சிலர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் மாட்ட வாய்ப்புள்ளது. தனியார் துறையில் உள்ளவர்கள் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

ஒன்பதாம் அதிபதி எட்டில் மறைவதால் முன்னோர்களின் பரம்பரை நோய்களான சுகர், பிபி, தைராய்டு, கைகால் மூட்டு வலி போன்றவைகள் அழையா விருந்தாளியாக வந்து சேரும். கடக ராசி பிள்ளைகளின் தந்தை உத்தியோகம் மற்றும் தொழில் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்லலாம். மத்திம வயதினர் தந்தையுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழலாம்.

கூட்டுத் தொழில் செய்யும் தந்தை, மகனுக்கு மனஸ்தாபம் தோன்றும். தந்தைக்கு வைத்திய செலவு அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளிடம் கருத்து வேறுபாடு மிகுதியாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைக்காக வழக்கு பதிவு செய்யலாம்.பணமா?

பாசமா என்ற மனப் போராட்டம் அதிகரிக்கும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகளை மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேசி முடிப்பது நலம். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சம்பளம், வேலை பார்க்கப் போகும் கம்பெனி பற்றிய முழு விபரங்களை தெரிந்து வைத்திருப்பது நல்லது. சிலரின் பண்படுத்த முடியாத பூர்வீகச் சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதற்கான பணம் கிடைக்கும். ஏழில் சனியும், எட்டில் குருவும் இருப்பதால் வாலிப வயதினருக்கு சிறு தடை தாமதத்திற்கு பின் திருமணம் கைகூடும்.

எட்டாமிட குருவால் சுப பலன்களில் சிறிய சாதகமற்ற நிலை இருந்தாலும் குருவின் பார்வை பதியும் பனிரெண்டு,இரண்டு, நான்காம் இடங்கள் மூலம் உங்களுக்கு சாதகமான பலன் உண்டு. குறுகிய காலமான இந்த ஐந்து மாதத்தை இறைவழிபாட்டால் எளிதில் கடக்க முடியும் என்பதால் கவலை வேண்டும்.

ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை பனிரென்டாமிடத்திற்கு இருப்பதால் செலவுகள், விரயங்கள் அதிகமாகும். குருப் பார்வை என்பதால் சுப செலவுகளான பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம், தொழில் முன்னேற்றம், உத்தியோகம், அரசியல் பதவி, அசையும், அசையாச் சொத்து, தங்க ஆபரணங்கள் என்று செலவுகள் அவரவர் தேவைக்கும், வயதிற்கும் ஏற்ற ஏற்படும். பிள்ளைகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லலாம். முதியோர் இல்லத்தில் இருக்கும் தாத்தா,பாட்டியை பேரன், பேத்திகள் வீட்டிற்கு அழைத்துவருவார்கள்.

பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்களோ என்று பயந்த வயோதிகர்களுக்கு வீட்டிலே இருக்கும் சூழ்நிலை உருவாகும். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைக்கும். வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள் திரும்புவார்கள்.

தீராத நோய் தாக்கத்தால் நீண்ட நெடுங்காலமாக மருத்துவமனையில், தங்கி வைத்தியம் செய்தவர்கள் வீடு திருப்புவார்கள். பயம் குறைந்து, நிம்மதி ஏற்படும். குடுபத்துடன் வெளியூர், வெளிநாடு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.செய்யாத குற்றத்திற்கு சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறை தண்டனை அனுபவிப்பவர்கள் நன் நடத்தை காரணமாக விடுதலையாவார்கள். வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்ப முடியாமல் தவிப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்பும் வாய்ப்பு உண்டாகும்.

ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை தன ஸ்தானமான இரண்டாம் இடத்திற்குப் பதிவதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் குறையும். பல்வேறு வேதனையுடன் எந்தப் பிரச்சனையை எப்படி சீர் செய்வது என்ற பயத்துடன் வாழ்ந்தவர்களின் அனைத்து குறைகளையும் குருவின் பார்வை தீர்க்கும். மலைபோல் நின்ற அனைத்து பிரச்சனைகளும் பனி போல் மறையும்.பொருள் குறைபாடு நீங்கும். வரவுக்குள் செலவு செய்ய முடியாமல் இருந்த உங்களுக்கு தன வரவு திருப்த்தியாக இருக்கும்.

பற்றாக்குறை பட்ஜெட் இருக்காது. வீண் விரையம் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். கண்ணில் இருந்த குறைபாடுகள் சரியாகும். ஆடம்பர சுக போக விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். அரை வயிறு சாப்பாட்டிற்கே திண்டாடியவர்களுக்கு வாழ்வாதாரம் உயரும்.விதவிதமான உணவு கிடைக்கும். இதுவரை பாரா முகமாக இருந்த குடும்ப உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகரிக்கும், மனதை மகிழ்விக்கும். சினிமா, டி.வி, நாடகம், தெருக்கூத்துக் கலைஞர்கள், மேடைப் பாடகர்கள் என கலைத்துறையின் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்றமும், மாற்றமும் தேடிவரும்.

ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ராசிக்கு நான்காமிடத்தில் பதிகிறது. நான்காமிடம் என்பது கல்வி, சொத்து, வாகனம்சுகம் பற்றிக் கூறுமிடம். அரசு பொது தேர்வு நடை பெறும் போது குருவின் பார்வை நான்காமிடத்திற்கு இருப்பதால் கடக ராசி 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெறுவது உறுதி. டிவி,போன் என பொறுப்பில்லாமல் இருந்து வந்த குழந்தைகள் அதிலிருந்து மீண்டு எதார்த்த வாழ்க்கைக்கு வருவார்கள். அரியர்ஸ் பாடங்களை மீண்டும் எழுதி மேற்படிப்பை தொடரும் அமைப்பு உருவாகும். ஆரோக்கிய குறைபாடு நீங்கும். வாடகைக்கு போகாமலிருந்த சொத்துக்கள் வாடகைக்குப் போகும். விற்க முடியாமல் கிடந்த பழைய சொத்துக்கள் விற்று முழு பணமும் வந்து சேரும். எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். தடைபட்ட வீடு கட்டும் பணி விறுப் விறுப்படையும். கிரகப் பிரவேசத்திற்கு தேதி குறிக்கலாம்.

புதிய வாகன யோகம் கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். தாயின் ஆரோக்கியத்திலிருந்த பின்னடைவு சீராகும். தாயின் அன்பும் நல்லாசியும் கிடைக்கும். தாய்வழிச் சொத்திலிருந்த வில்லங்கங்கள் சீராகும்.விவசாயிகளுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். விதைகள், உரங்கள் சகாய விலையில் கிடைக்கும்.இலவச கால்நடைகள் கிடைக்கும்.

பெண்கள்: வீட்டில் சுப செலவுகள் அதிகமாகும். நகைநட்டு வாங்குவது, நிலம், வீடு,வாகன யோகம் என சுப விரயங்கள் மன மகிழ்வைத் தரும். எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் பல பெண்கள் புனர்விவாகம் செய்வார்கள்.

புதிய தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் உங்கள் திறமை மிளிரும் காலம். பல பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுவின் உதவியுடன் புதிய தொழில் முனைவோர்களாக மாறுவார்கள். கணவர் மற்றும் குழந்தைகளின் முழுமையான அன்பை உணர்வீர்கள். தாய் வழிச் சொத்தும் நல்லாசிகளும் கிடைக்கும். ஏற்ற, இறக்கம் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. அஷ்டம குரு என்பதால் முட்டுக்கட்டை போட்டாற்போல் பல குழப்பங்கள் இருந்தாலும் முடிவு நன்மையாகவே இருக்கும். அதனால் கடக ராசியினர் இந்த 5 மாதத்தை எளிதில் கடந்து விடுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட பல வித நன்மைகள் கூடிவரும். பிரதோஷ காலத்தில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்து வரவும்.