13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

Nila
2 years ago
13.11.2021 குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

ராஜயோகம் நிரம்பிய சிம்ம ராசியினரே இதுவரை ராசிக்கு ஆறாமிடத்தில் நின்ற குருபகவான் ஏழாம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். சனிபகவான் ஆறாமிடத்திலும் ராகு பகவான் பத்தாமிடத்திலும், கேது பகவான் நான்காமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஏழாமிட குருவின் பொதுபலன்கள்: ஏழாமிடம் என்பது களத்திரஸ்தானம்.திருமண வாழ்க்கை, நண்பர்கள்,தொழில் கூட்டாளிகள், சமுதாய அந்தஸ்து ஆகியவற்றை பற்றிக் கூறுமிடம். சிம்மத்திற்கு குரு ஐந்து மற்றும் எட்டாம் அதிபதி. ஐந்தாம் அதிபதியாகி ஏழாமிடத்திற்கு செல்லும் குரு பல சாதகங்களைச் செய்தாலும் அஷ்டமாதிபதியாகி சப்தம ஸ்தானத்திற்கு செல்வதால் சில சாதகமற்ற பலன்களையும் தருவார். அதே நேரத்தில் குரு சிம்மத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி என்பதால் சுப பலன்கள் மிகைப்படும்.

ஐந்தாம் பாவத்திற்கு வளர்ச்சியை கொடுக்கக் கூடிய பாவகம் ஏழாம் பாவகம் என்பதால் அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். குரு அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் விபரீத ராஜயோகமாகும். ஐந்தாம் அதிபதி ஏழிற்கு செல்வதால் இரண்டாவது குழந்தை பிறக்கும். சிறிய இடப்பெயர்ச்சி செய்ய நேரும். குடியிருக்கும் வீடு, தொழில் நடத்துமிடம் என ஏதாவது ஒரு இடமாற்றம் செய்ய நேரும்.

வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்கள் நான்கைந்து மாதங்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள் .பூர்வீகத்தில் இருப்பவர்கள் வேலை விஷயமாக குறுகிய காலம் வெளிநாடு சென்று வரலாம். அடிக்கடி குல தெய்வ கோவிலுக்கு சென்று வரும் ப்ராப்தம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் பல மடங்கு லாபத்தை பெருக்கித்தரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கணவன்,மனைவி ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரலாம்.

இதுவரை அரசியலில் காலடி எடுத்து வைக்காதவர்கள் அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு அரசியல் களத்தில் குதிப்பீர்கள். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு பொறுப்புகளும், கவுரவப் பதவிகளும் விபரீத ராஜ யோகமாக தேடி வரும். சில புத்திசாலி அரசியல்வாதிகள் கட்சி விட்டுக் கட்சி மாறி தமது அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக்கிக் கொள்வார்கள். அதே குரு அஷ்டமாதிபதியாகவும் இருப்பதால் கூட்டணி கட்சியின் மூலம் சில பல சங்கடங்களையும் சந்திக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள், தலைமைப் பதவிகள் தேடிவரும். திறமைக்கும்,தகுதிக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகளின் உங்கள் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர்.விரும்பிய சலுகைகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலனும் ஆதாயமும் உண்டு.

பத்தாமிட ராகுவால் தொழிலில் நினைத்ததை அடைய குறுக்கு வழியில் செல்ல மனம் ஆசைப்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி பெரும். இதுவரை போட்டியாகவும், பகையாகவும் இருந்தவர்கள் உங்களின் திறமை தெரிந்து நட்பு பாராட்டலாம். உங்களோடு இணைந்து தொழில் செய்ய முன்வரலாம்.சில தம்பதிகள் ஒன்றாக இணைந்து கூட்டுத் தொழில் தொடங்குவார்கள். நிதி நிறுவனங்கள் மூலம் தொழிலுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும்.
பலரின் வெளிநாட்டு வியாபாரக் கனவு நினைவாகும். ஏற்கனவே வெளிநாட்டு வணிகம் செய்பவர்களுக்கு புதிய வெளிநாட்டு ஒப்பந்தங்கன் கிடைக்கும். அந்நிய மதத்தவர், வேற்று மொழிய பேசுபவர், வெளிநாட்டவர்களின் முதலீடு மற்றும் ஆதரவு கிடைக்கும்.

நல்ல வருமானம் வரும். நல்ல செலவும் வரும்.நல்ல தொழில் முன்னேற்றம் ஏற்படும் காலத்தில் வரும் லாபத்தை மறு முதலீடாக்குவது சுப விரயமாக்குவது உங்கள் கையில் தான் இருக்கிறது. கால புருஷ ஐந்தாம் அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் நிழல் கிரகமான கோட்சார ராகு பயனிப்பதால் கலைத் துறையின் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்றம் உண்டாகும்.

பல்வேறு சாதகமான பலன்களை குரு வழங்கினாலும் கோட்சாரத்தில் நான்காமிடத்தில் இருக்கும் கேதுவால் சில சங்கடங்கள் உண்டாகும். நான்காமிடம் என்பது சுக ஸ்தானம். தாய் மற்றும் வீடு, வாகனயோகம் பற்றிக் கூறுமிடும். பஞ்சு மெத்தை இருக்கும். வேலைப் பளுவால் மன உளைச்சலால் தூங்க முடியாது.
இது போன்ற அசௌகரியங்கள் வந்து போகும். சொத்து வாங்கப் போனால் விலை ஒத்து வராது. விலை படிந்தால் சொத்து பிடிக்காது போன்ற இன்னல்கள் வந்து கொண்டே இருக்கும். எனவே 1.1.2022க்குப் பிறகு சொத்துகள் தொடர்பான முயற்சியில் ஈடுபடவும்.

கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் படிப்பைத் தொடர வாய்ப்பு ஏற்படும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படிக்கும் சிம்ம ராசி மாணவர்கள் மாநில,மாவட்ட, பள்ளி அளவில் முதல் மாணவ மாணவியராக தேர்வடைவார்கள்.

ராசிக்கு குரு பார்வை இருந்தாலும் ஏழாம் அதிபதி சனி ஆறில் ஆட்சி பலம் பெறுவதால் திருமணம் பலமுறை தள்ளிப்போகும். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். அன்னிய உறவில் தாரம் அமையும். சில சிம்ம ராசி இளைஞர்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள், வாழ்கை இழந்தவர்கள், விதவைகளுக்கு மறுவாழ்வு தர முன் வருவார்கள்.

ஏழாமிடத்திற்கு வரும் குருவின் பார்வை ராசி, மூன்று மற்றும் பதினொன்றாமிடத்திற்கு பதிவதால் பல்வேறு சுப பலன்கள் தேடி வரும் நேரம் வந்து விட்டது.
ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு பதினொன்றாமிடத்தில் பதிவதால் லாபம் கூடும். குருவின் பார்வை உங்களை வளமான வாழ்க்கைக்கு அழைத்து செல்லப் போகிறது. விவாகரத்தாகி தனியாக அல்லல் படுபவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். இதுவரை தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து தொழில் செய்தவர்கள் கூட்டுத் தொழிலிருந்து விடுபட்டு தனியாக செயல்படக்கூடிய நேரம்.

கூட்டுத் தொழில் செய்து வந்த அண்ணன் தம்பிகள் பிரிந்து தனித்தனியாக தொழில் செய்யலாம். மூத்த சகோதரத்தால் தொழிலில் இருந்த இடர்கள் அகலும். வட்டிக்கு வட்டி கட்டி சமாளிக்க முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும் . நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் வழக்குகளால் அலைக்கழிகப்பட்டு மன வேதனை அடைந்தவர்களுக்கும் வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மன நிறைவும், நிம்மதியும் ஏற்படும். களத்திரம், பிள்ளைகளால் பொருள் வரவு உண்டாகும். வருவாய் அதிகரித்து சேமிப்பு உயரும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை அதிகமாகும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:குருவின் ஏழாம் பார்வை ராசிக்கு இருப்பதால் ஆன்ம பலம் பெருகும். உடல் பொழிவு ஏற்படும். தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும். எண்ணிய எண்ணம் பலிதமாகும். செய்யும் வேலைகளை தெளிவான மனநிலையோடு விரைவாக செய்து முடிக்க குருபகவான் உங்களுக்கு ஆசி வழங்குவார்.

ஆயுள்,ஆரோக்கியம் சிறப்படையும். ஆயுளுக்கு பங்கம் விளைவிக்க கூடிய கொடிய நோய்க்கு சிகிச்சை செய்பவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக என்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். உடலும், மனமும் புத்துணர்வு பெறும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை மூன்றாமிடமான சகாய ஸ்தானத்திற்கு இருப்பதால் உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் பலிதமாகும்.

 உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் ஏற்படும் கடனுக்கு அல்லது குடும்பத்திற்கு நீங்கள் பணம் செலவு செய்ய நேரும். அவர்களின் சுமைதாங்கியாக இருக்க வேண்டிய காலம். அதனால் கருத்து வேறுபாடு வரும் என்பதால் கவனம் தேவை. புதிய தங்க நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். செவித்திறன் குறைதல்,சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான பாதிப்புகள் குறையும்.

ஆவணங்கள் தொடர்பான சர்ச்சைக்கள் முடிவுக்கு வரும். தொலைந்த ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும்.உயில் எழுத ஏற்ற காலம். கடவுளே இல்லை என்று கூறியவர்கள் கூட ப்ரபஞ்ச சக்தியை உணர்வார்கள்.தடைபட்ட குலதெய்வ வழிபாடு தொடரும். குலதெய்வ அனுக்கிரகம் ஏற்படும்.

சித்தர்கள் மற்றும் ஆன்மீக குருமார்களின் நல் ஆசி கிடைக்கும்.ஆன்மீக சுற்றுலா கேதார்நாத், பத்திரிநாத்,கைலாஷ், மானசரோவர் போன்ற தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.கோவில் திருப்பணியில் ஈடுபடும் ஆர்வம் வரும். தான தர்மம் செய்து புண்ணிய பலனை கூட்டுவீர்கள் தந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தை வழி முன்னோர்களுக்கு முறையான திதி, தர்பணம் செய்து ஆசி பெற முயல்வீர்கள்.

பெண்கள்: எட்டாமிடம் என்பது மாங்கல்ய ஸ்தானம் என்பதால் பெண்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாங்கல்யத்தைக் கழட்டக் கூடாது. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும்.உங்கள் பேச்சிற்கு மதிப்பு உயரும்.

அடமானத்திலிருந்த நகைகள் வீடு வந்து சேரும். சுப நிகழ்வுகள், ஆடம்பர விருந்துகள்,ஆடம்பர உணவு விடுதிக்கு செல்லுதல் போன்ற பொழுபோக்கு இடங்களுக்கு சென்று உங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.வாக்கு வன்மை பெறும்.கொடுத்த வாக்கை எளிதாக காப்பாற்றி விடுவீர்கள்.

தன வரவு இரட்டிப்பாகும். செலவுகளைகுறைத்துக் கொண்டால் சேமிப்பு உயரும் . புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். இந்த குருப்பெயர்ச்சியில் பல சாதகமான பலன்கள் சிம்ம ராசிக்கு உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பரிகாரம்: பௌர்ணமி மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குல தெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையலிட பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பராமரிப்பிற்கு உதவ வேண்டும்.குழந்தைகள் காப்பகம் முதியோர் இல்லங்களுக்கு புத்தாடையுடன் இட்லியும் எள்ளு சட்னியும் தண்ணீருடன் தானம் தர முன்னோர்களின் நல் ஆசி கிடைக்கும்.