13.11.2021 குருப் பெயர்ச்சி - கன்னி

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - கன்னி

புத்திக் கூர்மையான கன்னிராசி வாசகர்களே, இதுவரை ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆறாமிடத்திற்கு செல்கிறார்.சனி பகவான் ஐந்தாமிடத்தில் ஆட்சி பலம் பெற்றிருக்கிறார். ராகு பகவான் ஒன்பதாமிடத்திலும் கேது பகவான் மூன்றாமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

ஆறாமிட குருவின் பலன்கள்: கன்னி ராசிக்கு குரு பகவான் நான்கு மற்றும் ஏழாம் அதிபதி. இரு கேந்திரங்களுக்கு அதிபதி ஆறாமிடமான மறைவு ஸ்தானத்தில் மறைவது சிறப்பல்ல.

நான்காமிடம் என்பது சுக ஸ்தானம் வீடு, வாகன யோகம் பற்றிக் கூறுமிடம்.ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை, நண்பர்கள்,தொழில் கூட்டாளிகள் மட்டும் வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுமிடம். ஆறாமிடம் என்பது கடன்,நோய்,எதிரி தொல்லைகள் பற்றிக் கூறுமிடம்.

நான்காம் அதிபதி குரு ஆறில் மறைவதால் கடன் பெற்றாவது ஆடம்பர வீடு, ஆடம்பர கார் வாங்கும் வாய்ப்பு உண்டு. வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். தாய் வழிச் சொத்தால் தாய் வழி உறவினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்படும். இதனால் தாயின் உடல் நிலையில் சற்று பாதிப்பு இருக்கும்.

இளைய சகோதர வழியில் சில ஆதாயங்கள் கிடைக்கப் பெற்றாலும் அவரால் சில மன உளைச்சலும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். உங்களின் ஞாபக குறைவை உற்றார் உறவுகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்துவார்கள். முன்னோர் வழி சொத்தின் பங்கீடுகள் முறையற்றதாக இருக்கும். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு ஏற்படலாம். அல்லது வாரிசு சான்றிதழ்கள், சொத்து சம்பந்தமான ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் மன வேதனையைத் தரும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயிலை அல்லது முக்கியமான ஆவணங்களை கை மறதியாக வைத்துவிட்டு தேடுவார்கள். பூர்வீக சொத்து தொடர்பான கோர்ட் பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும் என்பதால் வழக்கை ஒத்திப்போடுவது உத்தமம்.

சிலருக்கு பலதலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடன் அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.
தம்பதிகளிடையே ஒற்றுமை குறைபடும். சிலருக்கு விவாகரத்தும் நடக்கலாம். வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். களத்தரத்தின் மூலம் சில வீண்மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரும். தொழில் கூட்டாளிகளால் கடன் உருவாகலாம் அல்லது புரிதல் இன்மையால் பிரியலாம். நண்பர்களின் சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடக் கூடாது.

விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்தபடி இருந்தாலும் விரும்பிய விலை படியாது. இந்த ஆண்டு விளைச்சலுக்கு போதிய மழை பெய்யும். பயிர்களை காப்பீடு செய்வதால் அரசின் ஆதாயம் பெற முடியும்.

ஆறாமிட குருவால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைபட்ட பதவி உயர்வு தேடி வரும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. உங்கள் அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்ச்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி ஏற்பட்டாலும் பெற்ற பதவிக்கான வேலையை திறம்பட செய்து பெயரும் புகழும் அடைய அதிக சிரமம் எடுக்க வேண்டும். ஆறில் குரு ஊரில் பகை பத்து ரூபாய் முதல் போட்டு ஒரு ருபாய் லாபம் பார்த்த கதையாக இருக்கும். முக்கிய பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைக்க கடுமையாக போராட நேரும். மிகவும் எச்சரிக்கையாக நிதானமாக பயபக்தியுடன் காலத்தை கடத்த வேண்டும்.

மாணவர்கள் கல்லூரி மேற்படிப்பிற்கு இடம் பெயர நேரும். சிலர் வங்கியில் கடன் பெற்று உயர்கல்வி தொடர நேரும். இளவயது பள்ளி மாணவர்கள் அதிக சிரமம் எடுத்து படிக்க வேண்டும். ஜாலியாக இருப்பதுடன் வரும் கல்வியாண்டில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உங்களை தகுநிலைப்படுத்துவது மிக முக்கியம். குரு நின்ற ஆறாமிடத்தின் மூலம் சுப பலன்கள் குறைவு பட்டாலும் பார்வைபடும் 10,12, 2ம் இடங்களின் மூலம் சுபபலன்கள் உண்டு.
கலைத்துறையினரின் தேவைக்கு பொருள் கிடைக்கும். குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில்பதிகிறது. அது புதனின் வீடாகிய மிதுனம் உபய ராசி என்பதால் கமிஷன் அடிப்படையிலான முதலீடற்ற தொழில் செய்பவர்களுக்கு மிக மிக சாதகமான பலன் கிடைக்கும்.

கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் செய்பவர்கள் தொழிலில் புதிய திட்டங்களை மாற்றங்களை செயல்படுத்துவீர்கள். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். சிலர் பெரிய தொகையை கடன் பெற்று அதன் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மிகைப்படுத்தலான எதிர்பார்ப்புகள் தவறான ஒப்பந்தத்தில் உங்களை மாட்டி விடும். அதிகமாக முதலீடு செய்து கையை சுட்டுக்கொள்ளாமல் இருப்பது சிறப்பு. தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. லாபத்திற்கேற்ற விரையமும் இருக்கும்.

பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும். பொது தொண்டில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் வந்து சேரும். ஒரு சிலருக்கு தந்தையின் பதவியை ஏற்று செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்களின் குலம் தொடர்பான கோவில் பூஜைகள், திருவிழாக்கள்,குடும்ப சுப நிகழ்வுகளில் முதல் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை பன்னிரண்டாமிடமான விரைய ஸ்தானத்தில் பதிகிறது. ஆரோக்கிய குறைபாட்டால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றவர்கள், படுக்கையில் நீண்ட நாள் இருந்தவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கை காலில் அடிபட்டு வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்தவர்கள் பூரண குணமடைந்து லௌகீக இன்பங்களை அனுபவிக்கு வாய்ப்பு உருவாகும். பரம்பரை நோய் தாக்கம் குறைந்து பூரண ஆரோக்கியம் கிடைக்கும்.

நோயின் தன்மை புரியாதவர்களுக்கு மாற்று மருத்துவம் பயன் தரும். அரச துரோகத்தால் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறைந்து விடுதலை கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான சலுகைகள் கிடைப்பதில் இருந்த தடை, தாமதங்கள் விலகும்.

வீட்டில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம், மணி விழா போன்ற சுப நிகழ்விற்கான விரயங்கள் இருக்கும். மகன், மகளிடம் கோபித்துக் கொண்டு தனிக்குடித்தனம், முதியோர் இல்லத்திற்கு சென்ற தாய், தந்தையர் மீண்டும் இல்லம் திரும்புவார்கள். கடன் மற்றும் குடும்ப பிரச்சனைக்காக தலை மறைவானர்கள் வீடு வந்து சேருவார்கள். மதப் பற்றால் மதம் தொடர்பான ஆசிரமங்கள், இயக்கங்களில் போய்ச் சேர்ந்தவர்கள் மீண்டும் குடும்பம், குழந்தைகள் என வாழத் தொடங்குவார்கள். துக்கம் குறைந்து படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ராசிக்கு இரண்டாமிடமான தனம், குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. திருமணம் கூடி வரும். ஏழாம் அதிபதி குரு ஆறில் இருப்பதால் வரன், வதுவைப் பற்றி நன்றாக விசாரிக்க வேண்டும். மேலும் ஏழாம் இடத்திற்கு சனியின் 3ம் பார்வை இருப்பதால் அவசரமான சுயவிருப்ப விவாகம் செய்தவர்கள் அல்லது செய்யும் யோசனையில் இருப்பவர்கள் வெகு விரைவில் கருத்து வேறுபாட்டால் பிரிய நேரும்.
வாக்கில் நிதானமும் எதார்த்தமும் இருக்கும். குடும்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவீர்கள். பொருளாதர முன்னேற்றம் மகிழ்சியை தரும். பல்வேறு விதமான யோக பலன்கள் வீடு தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். பலருக்கு புதிய மொழியை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்பை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு தூரதேச பயணம் ஏற்படும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நடத்துபவர்களுக்கு பொற்காலம்.

பேச்சை தொழிலாக கொண்ட ஆசிரியர்கள், மார்கெட்டிங் செய்பவர்கள், ஜோதிடர்கள், கமிஷன் ஏஜென்ட்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தேவைக்கு மிகுதியான உபரி வருமானம் கிடைக்கும். பொருள் வரவு இருப்பதால் கடன் சுமை பெரிதாக தெரியாது. இரண்டாமிடத்திற்கு சனி பார்வையும் இருப்பதால் ஒரு சில காரியங்கள் தடைபட்டாலும் முடிவில் நல்லவிதமாக உங்களுக்கு சாதகமாக முடியும்.

அரசு வகை ஆதாயம் நிச்சயம் உண்டு. வயதான தாய் தந்தையர்கள் பிள்ளைகளால் நன்கு பராமரிக்கப்படுவார்கள். கோட்சார ராகு ஓன்பதாம் இடத்தில் இருப்பதால் ஜனன கால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலம் இழந்தவர்களுக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இறையுடன் மனம் ஒன்றாது. சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம், சாமியே கிடையாது என்று விரக்தி ஏற்படும். ஒரு சிலர் மதம் மாறுவார்கள். தந்தையின் மேல் எவ்வளவு அன்பை பொழிந்தாலும் அவர் உங்களை குற்றம் குறை கூறி வருவார். தந்தை வாசிக்கும் குற்றப்பத்ரிக்கையால் மன பாரம் அதிகமாகும்.

பெண்கள்: வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. திருமணமான தம்பதிகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நேரம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற முடியும். பெரியோர்களாலும், உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். மதப்பற்று மிகும்.குழந்தைகளின் நலனில் ஆர்வம் உருவாகும். நல்ல துணிச்சலும், குரு பக்தியும் ஏற்படும். நிறைந்த வருமானம் இருக்கும்.ஒன்பதில் ராகு இருப்பதால் ஒரு சிலர் மூத்த சகோதர, சகோதரிகளுக்காக பூர்வீக சொத்தை விட்டுக் கொடுக்கலாம்.

கிரகங்கள் தங்கள் கடமையை செய்யும் போது வழிபாடு குடையாக காத்து நிற்கும். ஜனன கால ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருந்தால் எந்த பாதகமும் ஏற்படாது. நம்பிக்கை மிக முக்கியம். எந்த கை உங்களை விட்டாலும் உங்களின் நம்பிக்கை உங்களை கைவிடாது.

பரிகாரம்:

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல், தேங்காய் மாலை சாற்றி அவுல், பொரிகடலை, வெல்லம், கொழுக்கட்டை,அப்பம் வடை, அதிரசம்,முறுக்கு,சுண்டல், முக்கனிகள்,வெற்றிலை,பாக்கு பழம் போன்ற தங்களால் முடிந்த நிவேதனம் படைத்து தூபம் தீபம் ஏற்றி வழிபாடு பூஜை செய்வதால் சகல விதமான தடைகள் சங்கடங்கள் நீங்கும்.விநாயகர் அகவல் பராயணம் செய்து வர கஷ்டங்கள் விலகி ஓடும்.