13.11.2021 குருப் பெயர்ச்சி - துலாம்

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - துலாம்

நீதிமான்களான துலா ராசியினரே, இதுவரை ராசிக்கு நான்காமிடத்தில் நின்ற குரு பகவான் ஐந்தாமிடத்திற்கு செல்கிறார். சனி பகவான் நான்காம் இடத்திலும், ராகு பகவான் எட்டாமிடத்திலும் கேது பகவான் இரண்டாமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். ஐந்தாமிட குருவின் பலன்கள்: பொதுவாக குருபகவான் ஐந்து, ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களுக்கு வரும்போது நன்மையே செய்வார். துலாம் ராசிக்கு குரு மூன்று மற்றும் ஆறாம் அதிபதி.ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம்.

குலதெய்வம், குழந்தைகள் மற்றும் அதிர்ஷ்டம், பதவிகள், கவுரவம் பற்றிக் கூறுமிடம். மூன்றாம் அதிபதி குரு ஐந்திற்குச் செல்வது நல்லதுதான். ஆறாம் அதிபதி குரு ஐந்திற்குச் செல்லும் போது சில சாதகமற்ற சூழ்நிலையும் உண்டாகும். நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும். நல்ல ஆலோசனை கூறி தன்னைச் சார்ந்தவர்களை வழி நடத்தும் எண்ணம் தோன்றும். தியாக மனப்பான்மை, தாராள குணம் ஏற்படும். கவுரவப் பதவிகளும் பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும்.

ஆன்மீக நாட்டம் மிகும். மிகக் குறிப்பாக சிவ வழிபாட்டில் ஆர்வம் மிகும். ஆன்ம பலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும். தந்தை வழி முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகத்திற்கு வந்து பெற்றோர்கள் , ஆன்மீக பெரியோர்களின் ஆசி பெறுவார்கள். விட்டுப் போன குல தெய்வ வழிபாடு, பிரார்த்தனைகளை செய்து முடிப்பார்கள்.

தொழில் உத்தியோகத்திற்காக நிமித்தமாக வெளியூர் வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு வந்து செட்டிலாகுவார்கள். பலருக்கு இடமாற்றம் செய்ய நேரும். கைமறதியாக வைத்த ஆவணங்கள் கண்ணில் தென்படும். சிலர் உயில் எழுதலாம் அல்லது உயிலில் திருத்தம் செய்யலாம். வெளிநாட்டில் வாழ்ந்த இளைய சகோதரம் பூர்வீகச் சொத்தில் குடியேறுவார்.

இது நாள் வரை பூர்வீகச் சொத்து நமக்கு மட்டும் தான் என்று மனக்கோட்டை கட்டியவர்களுக்கு உடன் பிறந்தவர்களால் மனசஞ்சலம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் பக்கத்து சொத்தின் உரிமையாளரு டன் எல்லைத் தகராறு உண்டாகலாம். சிலருக்கு சொத்தின் மீதுள்ள வம்பு வழக்கை சரிசெய்ய சொத்தின் மதிப்பை விட அதிகமாக கடன் உருவாகும். சிலரின் கடனை அடைக்க பூர்வீகச் சொத்து பயன்படும்.

ஆறாமதிபதி குரு ஐந்தாமிடத்திற்கு வருவதால் தன் வீட்டிற்கு விரய ஸ்தானமான பனிரெண்டிற்குச் செல்வதால் குழந்தைகளால் மன நிம்மதி ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தோன்றிய குறைபாடுகள் மறையும். சில பிள்ளைகளின் காதல் பிரச்சனைகளால் உருவாகிய வீண் வம்பு வழக்குகள் மறையும். உண்மையான காதலுக்கும் பொய்யான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை பலர் உணர்வார்கள். மாணவர்ளுக்கு உயர் கல்வியில் சேர தடை அல்லது மதிப்பெண் குறையலாம். உயர் கல்வியில் விரும்பம் இல்லாத பலர் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவார்கள்.

ராசிக்கு சனி பார்வை: இரண்டில் கேது. எட்டில் ராகு. இருப்பதால் சிறிய தடை, தாமத்திற்குப் பிறகு திருமணம் நடைபெறும்.கோட்சாரத்தில் இரண்டாமிடத்தில் நிற்கும் கேதுவினால் ஏற்படும் அசுப விளைவுகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும்.வீட்டில் சுப காரியங்கள் இனிதே நடக்கும்.

பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு நல்ல காலம். இரண்டாவது குழந்தை பாக்கியம் கிடைக்கும். விவகாரத்து வழக்கு சாதகமாகும். துலாம் ராசியினர் அர்தாஷ்டமச் சனியின் காலம் என்பதை மறக்கக் கூடாது. அஷ்டமச் சனியின் காலத்தில் ஏற்படும் கெடுதலின் பாதியை அர்த்தாஷ்டச் சனியின் காலத்தில் நடத்துவார் என்பது ஜோதிட விதி. உங்களின் ராசி அதிபதி சுக்கிரனும் சனியும் நட்பு கிரகங்கள் என்பதால் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

மேலும் முன்யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும் இதுவரை எட்டாமிட ராகுவிற்கு இருந்த கோட்சர குருபார்வை இல்லை என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்.எட்டாமிடம் என்பது பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம் தாலியை கழட்டுவது, புதிய தாலி மாற்றுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.

ஆரோக்கியத்தில் ஏதேனும் சிறிய ஆரோக்கிய குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் போட்டி பந்தங்களில் வெற்றி வாய்ப்பைத் தருவார்.

ராசிக்கு சனியின் பத்தாம் பார்வையும் குருவின் ஒன்பதாம் பார்வையும் இருப்பதால் தர்ம கர்மாதிபதி யோகத்தால் புதிய தொழில் சிந்தனை உருவாகும். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும். தொழிலுக்கு அரசு, அரசு அதிகாரிகளால் இருந்து கொண்டு இருந்த தொல்லை அகலும். சில்லறை வியாபாரம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் ஆதரவால் மன நிம்மதி ஏற்படும். குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு சென்றவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

 உங்களின் பணிச்சுமையை அதிகரித்த உயர் அதிகாரிகள் நட்பு பாராட்டுவர். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக் கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் விரும்பிய ஊருக்கு மாற்றம் கிடைக்கும்.

அரசியலில் இருப்பவர்கள் கட்சி மாறும் எண்ணத்தை கைவிடுவது நல்லது. சிலர் முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தி அதிக செலவு செய்து சமுக தொண்டாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிப்பார்கள். கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும், மக்களுக்காவும் உழைப்பார்கள். பொது நிகழ்சியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஐந்தாமிடத்தில் நிற்கும் குருவின் பார்வை பதியும் ஒன்பது, பதினொன்று மற்றும் ராசியின் மூலம் பல்வேறு சுப பலன்கள் தேடிவரும். குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை ஒன்பாதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பதிவதால் தந்தையிடம் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். தந்தையின் பரிபூரண நல்லாசிகள் பூர்வீக சொத்து தொடர்பான பாதகங்கள் குறைந்து சில மனஸ்தாபங்களுக்கு பின்பு கிடைக்கும். சிலருக்கு கை விட்டுப் போன பூர்வீகச் சொத்துக்கள் திரும்ப வரும். வெளிநாட்டில் பணிபுரிந்த தந்தை மூப்பு காரணமாக ஓய்வு பெற்று பூர்வீகம் வந்து செட்டிலாவார்கள். சிலருக்கு வேதம்,ஜோதிடம், சாஸ்திரம் கற்கும் ஆர்வம் மிகும்.

கடவுள் நம்பிக்கை மிகுதியாகும். சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக்கூடிய சங்கங்களில் நிர்வாக பதவிகள் கிடைக்கும். சிலருக்கு இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். இரண்டாவது திருமணத்திற்கு வரன் பார்த்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த காலகட்டத்தில் தடைபட்ட பிரச்சனைகளுக்கு காய் நகர்த்தினால் காரிய சித்தி ஏற்படும்.கலைத்துறையினரின் படைப்புகள் பாராட்டப்படும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

குருவின் ஏழாம் பார்வை பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் பதிவதால் திடீர் அதிஷ்டம், தொழில் மூலம் லாபஸ்தானம் வலுப்பெறும். உயில் சொத்து, பாலிசி முதிர்வுத் தொகை, இன்சூரன்ஸ், என எதிர்பாராத பொருள் வரவு உங்களை மகிழ்விக்கும். பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி, செழிப்பு ஏற்படும்.வீட்டில் தங்கம் தங்கவில்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு தங்கம் சேரும். கடன் தொல்லைகள் குறையும். சேமிப்புகள் அதிகரிக்கும். செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நினைவாகும். புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான வழக்குகள் சாதகமாகும். அரசு வழி ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். சஸ்பென்டாகி வேலைக்குச் செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். வராகடன் என்று முடிவு செய்த பணத்தின் சிறு பகுதி உங்களைத் தேடி வரும்.மூத்த சசோதர வழி ஆதாயம் ஏற்படும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ராசிக்கு இருப்பதால் மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடல் தேஜஸ் பெறும். அழகு மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கியபலன்களும், அதிர்ஷ்டங்களும் தேடி வரும்.

குருவின் ஒன்பதாம் பார்வையுடன் சனியின் பார்வையும் ராசிக்கு இருப்பதால் சிறு தடை தாமதத்திற்குப்பிறகு காரிய சித்தி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கிய குறைபாடு அகலும். துலா ராசி அரசியல் பிரமுகர்களுக்கு மிகச் சாதகமான காலம். கோட்சாரத்தில் ஆறாமிடமும் எட்டாமிடமும் பலம் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆறாமிட குரு ஐந்தில் அமர்வதாலும் எட்டாமிடத்தில் ராகு இருப்பாதால் உள்ளாட்சி தேர்தல் வெற்றி வாய்ப்பு சாதகமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கோவில் அர்ச்சகர்கள்,பராம்பரிய பண்பாட்டு கலையை கற்றுத் தருபவர்கள், நிதித்துறை, நீதித்துறை, நிதி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு மிகுந்த சாதகமான பலன் உண்டு.

பெண்கள்: ராசிக்கு கிடைக்கும் குரு பார்வை தொழில் மற்றும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். இதுவரை குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிந்த நீரோடையாக மாறும். கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய துலா ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. சுக்கிரன் வீடான துலாத்தை சனி பார்ப்பதால் இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள்.பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். தொழில், உத்தியோக மாற்றத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசியினருக்கு பணம், புகழ், அந்தஸ்து, ஆயுள், ஆரோக்கியம் என அனைத்து விதமான சுப பலன்களும் உண்டு. இறை வழிபாட்டில் ஈடுபட்டால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட வேண்டும். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவிட தடையில்லாத முன்னேற்றம் உண்டாகும்.