13.11.2021 குருப் பெயர்ச்சி - விருச்சிகம்

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - விருச்சிகம்

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற விருச்சிக ராசியினரே, இதுவரை ராசிக்கு மூன்றாமிடமான சகாய ஸ்தானத்தில் நின்ற குரு பகவான் நான்காமிடமான சுக ஸ்தானத்திற்கு செல்கிறார்.சனி பகவான் மூன்றாமிடத்திலும் ராகு பகவான் ஏழாமிடத்திலும், கேது பகவான் ராசியிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

நான்காமிட குருவின் பொது பலன்கள்: விருச்சிகத்திற்கு குரு பகவான் இரண்டு மற்றும் ஐந்தாம் அதிபதி. இரண்டாம் அதிபதி குரு இரண்டாம் பாவத்திற்கு பாவத் பாவகமான நான்காமிடத்திற்கு செல்வது சுப பலன் என்றால் ஐந்தாம் அதிபதி தன் வீட்டிற்கு பின் வீடான நான்காமிடத்தில் மறைவது அவ்வளவு விசேசமல்ல.ஆனால் குரு பார்வை பதியும் எட்டு, பத்து, பனிரெண்டாம் இடங்கள் மூலம் பல்வேறு சுப பலன்களும் நடைபெறும்.

நான்காமிடம் என்பது சுகஸ்தானம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும்.

தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும்.

அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற அதிக நேரம் ஒதுக்கி படித்தால் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு.

ஐந்தாம் அதிபதி குரு நான்கில் இருப்பதால் குழந்தை பாக்கியத்தில் தடை, தாமதம் ஏற்படலாம். கருவுற்ற பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். செயற்கை கருத்தரிப்பை நாடுபவர்கள் சுய ஜாதகத்தை சரிபார்ப்பது அவசியம்.

இரண்டாம் அதிபதி குரு நான்காமிடத்திற்குச் செல்வதால் இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.விவசாயிகள் பன்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம்.

கால்நடை மற்றும் உயிரினம் வளர்பவர்களுக்கு ஆதாயம் மிகும். விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம். சிலர் பயன்படாத காலி நிலங்களை கார் ஷெட், இரண்டு சக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாற்றி வாடகை பெறலாம். பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். கலைத்துறையினருக்கு பெயரை நிலை நிறுத்தும் வகையிலான வாய்ப்புகள் கிடைக்கும்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும்.சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம் .வெகு சிலருக்கு அடமானத்திவிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். மூன்று மற்றும்நான்காம் அதிபதி சனி மூன்றில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பவர்களின் சொத்தை இளைய சகோதரம் தனக்கு சாதகமாக பயன்படுத்துவார்.

சிலருக்கு சொத்து தொடர்பாக இளைய சகோதரத்துடன் கருத்து வேறுபாடு மேலோங்கும்.உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும். ஆனாலும் வம்பு, வழக்கை குறைக்க அமைதி காத்தல் நலம் .இளைய சகோதரத்தின் மூலம் விரையம்ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தை வழி உறவினர்களால் முன்னோர்களின் சொத்தை பிரிப்பதில் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.பொன், பொருளை ஏமாந்து பிறருக்கு விட்டு கொடுக்கும் நிலை உருவாகலாம்.

கோட்சாரத்தில் ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் இருப்பதால் வேற்று நபர் குறுக்கீட்டால் கணவன் மனைவி ஒற்றுமை, நெருக்கம் குறையும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் விவகாரம் வீதி வரை வந்து அவமானம் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன், மனைவியர் தங்கள் பிரச்சனையை அடுத்தவரிடம் முறையிட்டு பெரிது படுத்தாமல் தங்களுக்குள்ளே சமாதானம் செய்வது நலம். விட்டுக் கொடுக்காத நிலை மறு திருமணம் வரை கொண்டு செல்ல வாய்ப்புண்டு.

திருமண முயற்சியில் தடை தாமதங்கள், மனம் வருந்தும் நிலை ஏற்படும். பெண்ணை மாப்பிள்ளை வீட்டாரிடம் காண்பிக்கும் முன்பு பல முறை யோசிக்கவும். திருமண விஷயத்தில் மன வேதனைய உருவாக்கும் அல்லது விருப்பம் இல்லாத திருமணம் நடக்கும் காலம் என்பதால் திருமணத்திற்கு காத்து இருப்பவர்கள் அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும். தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை எட்டாமிடத்தில் பதிகிறது. எட்டாமிடம் விபத்து, கண்டம், அவமானம்,திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றைப் பற்றிக் கூறுமிடம். எட்டாமிடம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம் பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம். வாழ்க்கைத் துணையின் ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கும் நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு நோயின் வீரியம் குறையும். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலிருப்பவர்களுக்கு சிறிய வைத்தியத்தில் சீராகும்.

மீள முடியாத வழக்கால் அவமானப்பட்டவர்களுக்கு வழக்கிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். எப்போதோ நடந்த விபத்திற்கான நஷ்ட ஈடு இப்போது கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டப் பணம், சீதனம் கிடைக்கும். சுய ஜாதகத்தில் வலுவான தசா புக்தி இருந்தால் ஏற்றுமதி,இறக்குமதி மூலம் பெரும் லாபம் கிடைக்கும். தந்தையின் ஆயுள் தீர்க்கம் எனினும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

குருவின் ஏழாம் பார்வை ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. ராசியதிபதியான செவ்வாயும் பத்தாம் அதிபதியான சூரியனும் அரச வீடுகள் என்பதால் அரசு தரப்பில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வழி ஆதாயம் உண்டு.நிதி,நிர்வாகம் ,நீதித்துறை,வழக்குரைஞர்கள், நீதிபதிகள், ஆடிட்டர்கள் அதிக அளவிலான நன்மை அடைவார்கள். இவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்பட அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வங்கிகள், பைனான்ஸ் கம்பெனிகள் உங்களுக்கு கடன் கொடுக்க வீடு தேடி வருவார்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவது, கடன் கொடுப்பது, வெற்று காசோலை தருவது போன்றவற்றை தவிர்க்கவும்.

விருச்சிகம் கால புருஷ அஷ்டம ஸ்தானம். எளிதில் எந்தப் பிரச்சனையையும் வெளிப்படுத்தாத ராசி.ராசியில் கேது இருப்பதால் நிதானிக்க முடியாத அடிவயிறு தொடர்பான உடல் உபாதைகள் வரலாம்.

தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும்.உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

ஏற்கனவே சுமாராக இருந்த தொழில் கூட சூப்பர் தொழிலாகும். இழுத்து மூடி விட்டுப் போகும் நிலையில் உள்ள தொழில் கூட முன்னேற்றமடையும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும்.புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும்.மிகப் பெரிய புகழ் கிடைக்கும். செல்வச் செழிப்பு உருவாகும்.வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள்.

நீண்ட காலமாக தடைபட்ட செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழு ஆதரவு வழங்குவார்கள். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். கடன் தொல்லைகளிலிருந்து தீர்வு கிடைக்கும். ஏழில் ராகு இருப்பதால் நண்பர்களால், வாடிக்கையாளர்களால் மனக்கசப்பு உருவாகும். புதிய கூட்டுத் தொழில் ஆரம்பிக்க ஏற்ற காலம் அல்ல. நல்ல பங்குதாரரை இழப்பது அல்லது பயன்படாத பங்குதாரரை சேர்ப்பது போன்ற தவறுகள் நேரலாம் என்பதால் பங்குதாரர்களிடம் கருத்து வேறுபாட்டை தவிர்க்க சனிக்கிழமை தோறும் நவக்கிரக வழிபாடு செய்தல் நலம்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குரு மற்றும் சனியின் பார்வை பன்னிரண்டாமிடமான விரைய ஸ்தானத்தில் பதிகிறது. எந்த செயலிலும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் மன சஞ்சலம், மனக்குழப்பம் ஏற்பட்டு தடை, தாமதங்களை ஏற்படுத்தும்.

உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய காலதாமதம் ஏற்படும். வட்டி தொழில் , சீட்டுக் கம்பெனி,ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, தாமதம் ஏற்படும். முறையற்ற ஆவணங்களால் வம்பு , வழக்கு , பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

கண்களில் பார்வை குறைபாடு உருவாகும். மகான்களின் ஆசிகள், மந்திர உபதேசங்கள் கிட்டும். நீத்தார் கடன் தொடர்பான வழிபாடுகள் பலன் தரும். நெடுந்தூர வெளிநாட்டு பயணம், ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். பிரயாணத்தின் போது பொருள் இழப்பு, திருட்டு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.கர்ம வினை நோய்க்கு வைத்தியம் செய்பவர்கள் இயற்கை வைத்தியத்தை நாடினால் நோய் தாக்கம் விரைவில் கட்டுப்படும். பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும்.

பெண்கள்: திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையும் அன்னியோன்யமாக இருப்பீர்கள். மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம். வீடு, வாகனம், நிலம், ஆபரணம், அந்தஸ்து, பதவி சமுதாய அங்கீகாரம் என உங்கள் வாழ்நாள் கனவுகள் அனைத்தும் ஈடேறும்.

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்ந்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழுங்கள்.

பரிகாரம்: உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபாடு செய்தால் நல்ல மாற்றமும், ஏற்றமும் கிடைக்கும்.மனக் குறைகள் நீங்கும். லக்னத்தில் கேது இருப்பதால் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடவும்.