13.11.2021 குருப் பெயர்ச்சி - தனுசு

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - தனுசு

குருவின் ஆசி பெற்ற தனுசு ராசி அன்பர்களே, இதுவரை ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்ற குருபகவான் சகாய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு செல்கிறார். சனி பகவான் இரண்டாமிடத்திலும் ராகு பகவான் ஆறாமிடத்திலும் கேது பகவான் பன்னிரென்டாமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.ஏழரைச் சனியின் மூன்றாம் பாகம்.

மூன்றாமிட குருவின் பொது பலன்கள்: குருபகவான் தனுசிற்கு ராசி மற்றும் நான்காம் அதிபதி. மூன்றாமிடம் என்பது முயற்சி ஸ்தானம். தைரியம், தன் நம்பிக்கை, சகோதரன் ஸ்தானமாகும்.ராசியதிபதி குரு மூன்றாமிடத்திற்குச் செல்வது சிறப்பு. நான்காம் அதிபதி குரு மூன்றாமிடத்தில் தன் வீட்டிற்கு பின் வீட்டில் மறைவது சிறப்பல்ல. மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம்.வெற்றிக்கு வலு கூட்டுவது மற்றும் வெற்றி மேல் வெற்றியைத்தரும் இடம்.

அந்த வகையில் மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்திற்கு வரும் குருபகவான் உங்களுக்கு தைரியம்,தன் நம்பிக்கையத் தருவார். உங்களின் முயற்சிகளில் வெற்றியைத் தருவார். அனைத்து எண்ணங்களும் பலிதமாகும். சிந்தனை, செயல்திறன் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். எடுக்கும் தீர்மானங்கள் சரியாக இருக்கும். பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும். குழந்தைகளால் மன நிம்மதி ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் தருவார். குல தெய்வ அனுகிரகத்தை இரட்டிப்பாக்குவார்.

புகழ், அந்தஸ்து, கௌவரம் தரும் பதவிகளைப் பெற்றுத் தருவார். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், வேலை மாற்றம் என உங்களின் நல்வாழ்விற்கான அனைத்து மாற்றங்களும் நடக்கும். சகோதரத்தால் ஆதாயம் உண்டு.

சகோதரர் மற்றும் வேலையாட்களால் நிம்மதி ஏற்படும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் இன, மத அமைப்புகளில் முதன்மைப் பதவியும் கவுரவமும் கிடைக்கும். சாஸ்திர ஞானத்தை மிகுதியாக்குவார். கலைத்துறையினருக்கு பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வியைத் திட்டமிடுதலில் இருந்த குழப்பங்கள் விலகும். விளையாட்டு போட்டிகளில் கலந்து வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், சாதிக்க களம் தேடும் இளைஞர்களுக்கு சாதகமான காலம். உயர் கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் உயர் கல்லுரிப்படிப்பிற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.

நான்காம் அதிபதி குரு மூன்றில் வருவதால் ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் அதிக நேரம் உழைக்க நேரும்.சுக போகங்களை அனுபவிக்க முடியாது.வீட்டில் தங்கும் நேரம் குறைவாக இருக்கும். அண்டை அயலார்களிடைய நிலத்தகராறு, எல்லை பிரச்சனை வரும்.சொத்துப் பத்திரம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான மனக்கசப்பு அதிகரிக்கும். செல் போன் தொலையாலாம் அல்லது அதில் உள்ள முக்கிய தகவல்கள் திருடப்படலாம்.உங்களைப் பற்றிய தவறான வீண் வதந்திகள் உருவாகும். உங்களின் சொத்து, சுகத்தை சகோதரருக்கு விட்டுக் கொடுக்க நேரும். தாயின் சப்போட் உங்களின் சகோதரருக்கே கிடைக்கும்.

வயோதிகர்கள் இல்வாழ்க்கையில் இருந்து விடுபடுவார்கள். ஆன்மீக நாட்டமும், சேவை மனப்பான்மை¬யும் மிகையாகும். ஜனன ஜாதகத்தில் பன்னிரன் டாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா, புத்தி நடப்பவர்கள் ஆன்மீக இயக்கங்களில் சேர்ந்து அங்கேயே தங்கி முக்திக்கு வழி தேட நினைப்பார்கள். சிறை தண்டனை அனுபவிப்பவர்களுக்கு நன்நடத்தை காரணமாக தண்டனை காலம் குறையும். எதையாவது யோசித்து தூக்கத்தை தொலைத்தவர்கள்
நிம்மதியாக தூங்குவார்கள். சிலர் மன மாற்றத்திற்கு குறுகிய காலத்திற்கு வெளிநாடு,வெளி மாநிலத்திலுள்ள மகன் அல்லது மகள் வீட்டிற்கு சென்று வரலாம்.
ஆறாமிடத்தில் உள்ள கோட்சார ராகு சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோகத்தில் இணக்கமற்ற சூழல் நிலவும். சாதகத்தைவிட பாதகமே மிகுதியாக இருப்பதால் சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டும்.தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையை விடக் கூடாது.

ராகு ஆறாமிடத்தை விட்டு நகரும் வரை வேறு வேலை கிடைப்பது கடினம். லஞ்சம் மிகுதியாக புழங்கக்கூடிய அரசுத் துறையில் இருப்பவர்கள் ஆறில் உள்ள ராகுவால் வேலையை இழக்கலாம்.குருவின் பார்வை படும் இடங்கள் சாதகமாக இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். எனினும் தினமும் ஆதித்ய ஹருதயம் கேட்பதும், படிப்பதும் இன்னல்களை நீக்கும்.குருவின் பார்வை பதியும் இடங்களான ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்கள் மூலம் பல்வேறு பாக்கிய பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை ஏழாமிடத்திற்கு இருக்கிறது.ஏழாமிடம் என்பது திருமண வாழ்க்கை,தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் பற்றிக் கூறுமிடம். திருமணத்தடை அகலும். திருமணத்திற்கு காத்து இருக்கும் தனுசு ராசியினரின் திருமணக் கனவு நனவாகும்.சற்று வயதானவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும். குருவின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசியோடும் ஆடம்பரமாக சீரோடும், சிறப்போடும் திருமணம் நடக்கும் .மிகுந்த யோகமும் அதிர்ஷ்டமும் கூடிய திருமணம் நடக்கும் ஆக கெட்டி மேளச்சத்தம் கேட்கப் போவது உறுதி. தனுசு ராசியின் ஏழாமிடமான மிதுனம் இரட்டை ராசி என்பதால் சில தனுசு ராசியினர் தன் பெற்றோர் விருப்பத்திற்கு ஒரு திருமணம் தன் விருப்பத்திற்கு ஒரு திருமணம் என அதிரடி முடிவு எடுப்பார்கள். சிலருக்கு இரண்டாவதாக இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.

உபத்திரத்தைக் கொடுத்து வந்த பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். நிறைய அலைச்சலும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். பெரிய தொழில் முதலீட்டால் பெரும் பயன் உண்டு. முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வேலையாட்களிடம் ஒப்படைக்கும் முன்பு பல முறை யோசிக்கவும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். பழைய தொழில் கூட்டாளியின் விலகல் நிம்மதி தரும். புதிய திறமையான பங்குதாரரின் அறிமுகம் மகிழ்ச்சியைத் தரும்.

பெரிய மனிதர்களின் நட்பும் அறிமுகம் உதவியும் உண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் வெற்றிப் பாதையைக் காட்டும்.ஆரோக்கிய குறைபாடு அகலும். வராக்கடன் வசூலாகும்.கடன் பாதிப்பு குறையும். வீண் வம்பு, வழக்கிலிருந்து விடுபடுவார்கள். எதிரிகள் நட்பு கரம் நீட்டுவார்கள். வழக்குகள் சாதகமாகும்.வேற்று மொழி நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. பல வயதான தனுசு ராசியினர் பாக்கிய பலத்தால் தாத்தா, பாட்டியாவார்கள். ஒன்பதாமிடம் சிம்மம் என்பதால் சிவ கடாட்சத்தால் குலம் தழைக்க ஆண் வாரிசு கிடைக்கும். அதிர்ஷ்டமும்,பேரதிர்ஷ்டமும் ஒருங்கே உங்களை வழி நடத்தும். குறுக்கு வழியை கடைபிடித்தவர்கள் தர்மம், நேர்மை நியாயம் பற்றிப் யோசிப்பார்கள்.
புண்ணிய பலத்தை அதிகரிக்கும் தர்ம காரியங்களில் ஈடுபாடுவார்கள். சிலருக்கு கோவில் கட்டும் பாக்கியம் கிடைக்கும் .தடைபட்ட கோவில் கட்டும் பணி முடிந்து குடமுழுக்கும் நடைபெறும். பலருக்கு ஆன்மீக ஸ்தலங்களுக்கு புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.சமுக அந்தஸ்து,மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.தந்தை,மகன் உறவு மேலோங்கும். அறியாமையால் குடும்ப பெரியர்களிடம் சாபம் வாங்கியவர்கள் குருவின் பார்வை ஒன்பதாமிடத்திற்கு இருக்கும் இந்த காலத்தில் இயன்ற ஆடை தானம் தந்து ஆசி பெற பாக்கிய பலம் கூடும். வீட்டுப் பெரியவர்கள் உயிரோடு இருக்கும் போது முறையாக பராமரிக்காமல் துன்புறுத்தி விட்டு இறந்த பிறகு அவர்களை வழிபடுவதால் எந்த பயனும் கிடையாது. வாழும் காலத்தில் ஒருவரின் ஆசியைப் பெறுபவர்களின் ஏழு தலைமுறையினர் எந்தக் குறையுமின்றி வாழ்வார்கள்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. சனியின் பார்வை சேர்ந்து லாப ஸ்தானத்தில் பதிவது மிகச் சிறப்பு ஒரு மனிதன் தன் வாழ்நாள் எண்ணங்களை ஆசைகளை நிறைவேற்றுமிடம் பதினொன்றாமிடம். குரு, சனி பார்வை நினைத்த ஆசைகளை நிறைவேற்றும்.

பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப் பிரிவினை நடந்து உங்கள் பங்கு முழுமையாக கிடைக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தகவல், தொடர்பு ஊடகங்களில் உங்களின் பெயர் பிரபலமாக பேசப்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.பணத்தட்டுப்பாடு நீங்கும் .ஏதாவது வழியில் பணம் வந்து கொண்டே இருக்கும். கடன் சுமை குறையும். எதிர் கால வாழ்க்கையை நினைத்து பயந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். வராக் கடன்கள் வசூலாகும். அடமானத்திலிருக்கும் நகைகள் மீண்டு வரும்.

பெண்கள்: இந்த குருப்பெயர்ச்சியால் அதிக நன்மை பெறுபவர்கள் தனுசு ராசிப் பெண்களே என்று ஆனித்தரமாக கூறலாம்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தை நன் முறையில் வழி நடத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து பொறுமையாக செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் செயல்பாடுகள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும்.வீட்டிலும் அலுவலகத்திலும் உங்கள் சேவைகள் அனைவராலும் பாராட்படும்.மிக முக்கிய அரசின் நிர்வாக பொறுப்பில் இருக்கும் பெண்கள்,சீருடைப் பணியாளர்களின் புகழ் பரவும். பல பெண்கள் புதிய சுய தொழில் தொடங்கி சாதனை படைப்பார்கள்.

இந்த குருப் பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு சாதகமான முன்னேற்றம் தரும். கோட்சாரச் சனி மற்றும் ராகு கேதுவால் சுப பலன் உண்டு.ஏழரை சனியை பற்றி வருத்தம் குறையும்.

பரிகாரம்: விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை வெள்ளிக்கிழமைகளில் துளசியால் அர்சித்து வழிபட்டால் பணப்புழக்கம் அதிகரித்து கடன் தீரும். ஸ்ரீ சரபேஸ்வரர் மந்திரங்களை தினமும் முடிந்தளவு பாராயணம் செய்தால் நற்பலன்கள் தேடி வரும் சரபேஸ்வரரை வணங்க ஞாயிற்று கிழமை உகந்த நாளகும் அன்று, அசைவ உணவுகளை தவிர்த்து உடல், மன சுத்தி செய்து கொண்டு ராகு காலத்தில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் சிவன் கோவிலுக்கு சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்பு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நீங்கி வெற்றி கிடைக்கும்.