13.11.2021 குருப் பெயர்ச்சி - மகரம்

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - மகரம்

சனியின் ஆசி பெற்ற மகர ராசியினரே,இதுவரை ராசியில் நின்ற குருபகவான் இரண்டாமிடமான தன ஸ்தானத்திற்குச் செல்கிறார். சனி பகவான் ராசியில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். ஜென்மச்சனியின் காலம். ராகுபகவான் ஐந்தாமிடத்திலும், கேது பகவான் பதினொன்றாமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

தன குருவின் பொது பலன்கள்: மகர ராசிக்கு குரு மூன்று , பனிரென்டாம் அதிபதி. மூன்றாமிடம் முயற்சி ஸ்தானம். பன்னிரன்டாமிடம் விரயஸ்தானம். விரயாதி தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பல்ல. மூன்றாமதிபதியாகி குரு தன் வீட்டிற்கு பின் வீடான தன ஸ்தானத்திற்குச் செல்வதும் சிறப்பல்ல. இது போதாதென்று ஜென்மச் சனி வேறு. இந்த பெயர்ச்சியால் குரு தன் ஆதிபத்திய ரீதியாக சில சங்கடங்களைக் கொடுத்தாலும் தன் பார்வை படும் ஆறு, எட்டு, பத்தாம் பார்வை மூலம் பல அசுபங்களையும் குறைப்பார். பரிந்துரைக்கப்பட்டுள்ள சில எளிய பரிகாரகங்களை கடைபிடிக்கும் போது துன்பம் குறைந்து இன்பம் பெருகும்.

விரையாதிபதி குரு தன ஸ்தானத்திற்கு வருவதால் கோபித்துக் கொண்டோ, மனவருத்தத்திலோ வீட்டை விட்டுப் போன உறவுகள் வீடு திரும்புவார்கள். தொலைத்து போன, கை மறதியாக வைத்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் திரும்பவும் கிடைக்கும். சிலர் காணாமல் போன ஆவணங்களுக்கு நகல் போடுவார்கள்.

விரயாதிபதி குரு தன ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறுவதால் விரயம் ஏற்படும் என்று அறியாக் குழந்தை கூட பலன் சொல்லும். ஆனால் வரவு இருந்தால்தானே செலவு செய்ய முடியும் என்ற உங்களின் கேள்வி நியாயமானது தான். கவலை வேண்டாம். ஜென்மச் சனியாக இருந்தாலும் சனி மகரத்திற்கு தனாதிபதி என்பதால் தன வரவு இருந்து கொண்டே தான் இருக்கும். செலவை சரி செய்ய உண்ண நேரமில்லாமல் வேலை செய்ய வேண்டிய காலம்.

குடும்ப உறவுகளிடம் ஒட்டாமல் பிரிந்து வாழ்வது போன்ற மன உணர்வு இருக்கும். இதுவரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த சகோதரர்கள் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். சிலரின் இளைய சகோதரம் தொழில் மற்றும் உத்தியோக நிமித்தமாக வெளியூர் செல்லலாம். சிலருக்கு நிதானமற்ற நிலை பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். எந்தப்பிரச்சனையையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் இருக்கும். சிலருக்கு ஞாபக மறதி மற்றும் மனச் சோர்வு மிகுதியாகும்.

பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள். உயிரின வளர்பில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நில புலன் வாங்கும் எண்ணமும் இல்லாதவர்களுக்கு சொத்து சேரலாம். சிலர் தாயாரின் அன்பை சாதகமாக்கி தாயாரின் வீடு, மனையை தன் பெயரில் எழுதி வாங்குவார்கள். சிலரின் தாய் மூத்த மகனுக்கு தெரியாமல் முக்கிய சொத்துக்களை இளைய மகனுக்கு மட்டும் கொடுப்பார். சட்ட விரோதமாக புறம் போக்கு நிலத்தைப் பட்டாப் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சட்டச் சிக்கலை சந்திக்கலாம். மகர ராசி விவசாயிகள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் பெரும் இழப்பைத் தவிர்க்கலாம்.

கலைத்துறையினருக்கு சாதகமான நேரம். கோட்சார ராகு ஐந்தாமிடத்தில் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். எண்ணச் சிதறல்கள் மிகுதியாக இருக்கும். முழுமையாக ஆழ்ந்த பக்தியில் ஈடுபட முடியாது. சிலருக்கு இறை நம்பிக்கை குறைவு படும். குழந்தைகளுக்கு சிறிய ஆரோக்ய குறைபாடு ஏற்படும். சிலரின் பிள்ளைகள் தவறான நட்பு வலையில் மாட்டி வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள்.

கேது ராசி அதிபதி சனியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க முடியாத நிலை உருவாகும். லாபம் நிற்காது அல்லது வருமானம் குறைவுபடும். விரையம் கூடுதலாகும். குடும்பச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றத்தால் குடும்பத்தைப் பிரியும் நிலை ஏற்படும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் தாயகம் திரும்ப வர முடியாத சூழ்நிலை உருவாகும். சுய ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ள இயலும்.

மகர ராசியினருக்கு தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும். ஜனன ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்துவிடும். 40 வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: குரு தனது ஐந்தாம் பார்வையால் ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார். எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோய் தாக்கம் இருந்தவர்களுக்கு நோயிலிருந்து விடுபட குருபகவான் அருள் புரிவார். பகையை, பகைவர்களை வெல்லக் கூடிய ஆற்றல் உருவாகும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள்.

இதுவரை நீங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் திணறி கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலைமாறும். கடன் பெறுவதற்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி அலுத்துப் போன உங்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீடு தேடி வரும் காலம் இது. வீட்டின் சுப நிகழ்வுகளை நடத்த, தொழில் விரிவாக்க கடன், ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் என விரும்பிய கடன் தொகை கிடைக்கும். மீட்டர் வட்டி, கந்து வட்டி போடும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறாமல் வங்கிகளில் கடன் பெறுவது பாதுகாப்பு தரும்.

வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமான வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் அடிக்கடி வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.

ஆறு மற்றும் எட்டாம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும் பொதுத் தேர்வில் மகர ராசி +2மாணவ-&மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவீர்கள்.சக மாணவர்களிடம் உங்கள் தனித்திறமை வெளிப்படும். குழந்தைகளை பொதுத் தேர்வுக்கு தகுதி படுத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை எட்டாமிடத்தில் பதிகிறது. எட்டாமிடம் என்பது பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம். சில பெண்களின் ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடத்தில் நீச கிரகங்கள், வக்ர கிரகங்கள் நின்று திருமணத் தடையை ஏற்படுத்தும். இது போன்ற மாங்கல்ய தோஷத்தால் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும். வாழ்க்கைத் துணையின் ஆயுள் பலப்படும்.

ஆரோக்கியக் குறைபாடு அகலும். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். எட்டாமிடம் என்பது திடீர் அதிர்ஷ்டத்தைப்பற்றிக் கூறுமிடம் என்பதால் அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும். உங்களை அவமானப்படுத்திய வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் நன்நடத்தை காரணமாக விடுவிக்கப்படுவார்கள். ஜனன கால ஜாதகத்தில் எட்டாமிடம் வலிமையாக இயங்கினால் வெளிநாட்டிற்கு சென்று பிழைப்பு நடத்தும் சூழல் உருவாகும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்கு பதிகிறது. பத்தாமிடத்திற்கு ராசியதிபதி சனியின் பார்வையும் இருக்கிறது. அது சுக்கிரனின் வீடான துலாம் என்பதால் அழகு ஆடம்பர பொருட்கள் தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான நேரம். ஜென்மச் சனியின் காலம் என்பதால் மன சஞ்சலத்தால் எடுக்கும் முடிவுகள் தவறாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முக்கிய முடிவுகளை பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும். சுய ஜாதகத்தின் தசாபுக்திக்கு ஏற்ப தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் கேது இருப்பதால் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படலாம்.

தொழில் அபிவிருத்தி செய்யும் எண்ணம் மிகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதகம் அறிந்து புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லது. வியாபாரம் சிறப்பாக நடைபெற்று பணவரவு இருந்தாலும் லாபம் நிற்காது. வேலைப்பளு மிகும்.

பண பரிவர்த்தனை தொடர்பான வம்பு, வழக்கு வரலாம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் சட்டத்தை நாடாமல் இருப்பது நலம். சட்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காலம் என்பதால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என பிரச்சனைக்கு சம்பந்தம் பெற்ற நபருடன் நேரடியாக பேசி சமரசம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

பெண்கள்: குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் ஒன்றாக கலகலப்பாக பழகுவார்கள். மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும்.நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் இஷ்ட, குல தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து இந்த குருப் பெயர்ச்சியை கடப்பது சிறப்பு.

பரிகாரம்: வெகு சிலருக்கு ஜென்மச் சனியால் கோட்சார ரீதியான புனர் பூ தோஷம் இயங்கி திருமணத் தடையை சந்திப்பார்கள். பௌர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜையில் கலந்து பச்சரிசி உணவு தானம் தர தடைகள் அகலும். மாணவர்கள் தினமும் ஹயக்கிரீவர் வழிபாடு செய்வவர படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மையாகும்.