13.11.2021 குருப் பெயர்ச்சி - கும்பம்

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - கும்பம்

உழைப்பில் ஆர்வம் மிகுந்த கும்ப ராசியினரே,இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரன்டாமிடத்தில் நின்ற குருபகவான் ராசிக்குள் வருகிறார்.சனி பகவான் பன்னிரன்டாமிடத்தில் நிற்கிறார். ஏழரைச் சனி. ராகு பகவான் நான்காமிடத்திலும் கேது பகவான் பத்தாமிடத்திலும் சஞ்சாரம் செய்ய்கிறார்கள்.

ஜென்ம குருவின் பலன்கள்: கும்பத்திற்கு குரு பகவான் இரண்டு, பதினொன்றாம் அதிபதி. தன, லாபாதிபதியான குரு ராசியில் சஞ்சரிப்பதால் அற்புதமான யோக பலன்களைப் பெற்றுத் தரப் போகிறார். உங்களின் மனதடுமாற்றம் நீங்கி விவேகத்துடன் கூடிய வேகம், நிதானம், தைரியம் மற்றும் தெம்பு உங்களுக்குள் குடிபுகும். இது வரை நீங்கள் கடைபிடித்த வீரமும், விவேகமும் மேலும் அதிகரிக்கும்.

மனக் குழப்பம்,மனபயம், அச்ச உணர்வு நீங்கி தெளிவாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களை ஆட்டுவித்த கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? நம்பிக்கையானவர்களை எப்படி தேர்வு செய்வது? யாரை நம்புவது? தார்மீக முறையில் சம்பாதிப்பது எப்படி போன்ற அனைத்து ஞானத்தையும் குருபகவான் வழங்கப் போகிறார். ஆன்மீக கிரகமான குரு சட்டத்திற்கு உட்பட்டு எல்லோரும் அங்கீகரிக்கும் விதத்தில் பொருள் தருவார். அதிர்ஷ்டம் உழைப்பின் மூலம் முறையான, நேர்மையான வழியில் கதவை தட்டும். மொத்தத்தில் அளவான நியாயமான ஆசைகள் பலிக்கும்.

பெரும் வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும். வெளியில் சொல்ல முடியாது தவித்த பல பிரச்சனைகள் தானாக தீரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் தன்மை அதிகரிக்கும்.

பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கடன் தொல்லையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.பேச்சை மூலதனமாக கொண்ட வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், புரோகிதர்கள்,ஜோதிடர்கள், மார்கெட்டிங் , உணவுத் தொழில், ஹோட்டல் ஆகிய துறையிலிருப்பவர்கள் நல்ல ஏற்றம் பெறுவார்கள். திருமணத் தடை நீங்கும். எப்பொழுது இந்த வீட்டில் மேளச் சத்தம் கேட்கும் என்று எதிர்ப்பார்த்த பெற்றோருக்கும், என் வாழ்வில் திருமணம் எப்பொழுது நடக்கும் என கனவு கண்ட கன்னியருக்கும் காளையருக்கும் திருமண நாளை எண்ணும் காலம் வந்து விட்டது.காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.

மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுலபமாக நடைபெறும். திருமணத்திற்கும் ஏழரைச் சனிக்கும் சம்பந்தம் இல்லை.குழந்தை பாக்கியம் விரும்பியவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும்.தடைபட்ட வாடகை வருமானம் வரலாம்.

இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்த வீட்டில் இருந்த சிலர் வாடகை வீட்டிற்கு செல்ல நேரும்.வாடகை வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். மாணவர்களுக்கு கவனச் சிதறலையும் அசதியையும், சோம்பலையும் ஒன்பதாமிடத்தில் பதியும் குருபார்வை காக்கும்.

ஜென்மத்தில் நிற்கும் குரு தனது சிறப்பு பார்வையால் ஐந்து, ஏழு, ஒன்பதாமிடங்களை புனிதப் படுத்தப்போகிறார். இந்த ஜென்மத்தில் பாக்கிய ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒருங்கே இணைந்து பலன் தரும் காலம். இது உங்களுக்கு பொற்காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவார்கள். என்றைக்கோ மலிவு விலைக்கு வாங்கிப் போட்ட நிலம் விலை உயர்ந்து இப்போது விலையாகும். வீடு, வாகன யோகம் பலிதமாகும். தாயின் ஆரோக்கியம் சீரடையும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆலோசனையும், நல் ஆசியும் கிடைக்கும். செய்தி மற்றும் பத்திரிக்கைக் துறையினர், ஊடகங்களில் பணிபுரிவர்கள் புத்தியை தீட்டி சம்பாதித்து ஏற்றம் பெறும் காலம்.

பத்தாம் இடத்தில் சனியின் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். கும்பத்திற்கு சனி ராசியதிபதி மற்றும் விரயாதிபதி என்பதால் இக்கால கட்டத்தில் அதிக அளவிலான முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகுதியான இழப்பு ஏற்படலாம்.. மிகக் குறிப்பாக போடும் கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கடுமையான பாதிப்பு எற்படலாம்.

அல்லது வேலையாட்கள் நேரத்திற்கு வேலைக்கு வராமல் பணிகள் தேங்கிப் போகும். சிலருக்கு முதலீடே காணாமல் போகலாம். புதிய தொழில் முதலீடு, புதிய தொழில் ஒப்பந்தம் செய்பவர்கள் நம்பிக்கையான வாடிக்கையாளர்களை பயன்படுத்தினால் முதலீட்டை காப்பாற்றலாம். முதலீடு இல்லாத தொழில்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் தொழிலுக்காக இடம் பெயருபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாது. கலைத்துறையினருக்கு தடைகள் விலகி எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்: குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு ஐந்தாமிடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நேரம்.

மனசாட்சிக்கு புறம்பாக செய்த தவறான செயல்களை நிறுத்துவீர்கள். நிர்வகித்து வரும் பதவியை சட்டத்திட்டங்களுக்கு கட்டுபட்டு முறையாக வழிநடத்துவார்கள். பிள்ளைகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். திருக்கோவில்களைச் சுற்றி தொழில் ஸ்தாபனம் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் மிகுதியாக இருக்கும்.

குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று குல வழக்கப்படி பூஜை செய்யும் பாக்கியம் கிடைக்கும். கலை துறையினருக்கு ஏற்றம் மிகுதியாக இருக்கும். குழந்தைகளின் ஆயுள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தைகளின் மதி நுட்பம் உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். தவறான காதல் நட்பில் இருக்கும் குழந்தை மனம் மாறி உங்கள் கவுரவத்தை காப்பார்கள்.இளவயதினருக்கு பெண் குழந்தை பிறக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு பேத்தி பிறப்பாள். மனதை மகிழ்விக்கும் சுப நிகழ்வுகள் அனைத்து நடக்கும்.

அரசியலில் முக்கிய பங்கு, பதவி வகிப்பவர்களுக்கு பட்டங்களும், பதக்கங்களும் விரும்பிய பதவிகளும் தேடி வரும். எதிர் கட்சியினர் உங்களுக்கு அடங்கி போவார்கள்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை ராசிக்கு ஏழாமிடத்தில் பதிகிறது. இந்த இடம் திருமண வாழ்க்கை நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகள்,வாடிக்கையாளர்கள் பற்றிக் கூறுமிடம். ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருந்தால் பங்குதாரர்களிடம் இணக்கம் அதிகமாகும். நல்ல தகுதியும் திறமையும் நிறைந்த புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். புதிய நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். சுய ஜாதகத்தில் ஏழாம் அதிபதியுடன் தசாபுத்தியும் சாதகமாகி கோச்சார குருவுடன் சம்பந்தம் பெற்றால் திருமணம் உடனே நடந்து விடும்.

திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணமான தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். தம்பதியினர் தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தால் இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்துவார்கள். திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி மனக்கசப்பு நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ்வர்கள்.

சுய ஜாதக ரீதியாக தசா, புத்தி சாதகமற்று இருந்தால் கோட்சார ராகு ஏழாம் அதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சாரம் செய்வதால் கணவன், மனைவி கருத்து வேறுபாடு விவாகரத்து வரைச் செல்லும். சிலருக்கு சம்பந்திகளின் மிரட்டல் மன உளைச்சலைத் தரும். நம்பிக்கையான கூட்டாளியிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

நாலு வார்த்தை வேற்று மொழியில் பேசி பன்னாட்டு தொழில் செய்வதாக தீuவீறீபீ uஜீ காட்டும் போலியான கூட்டாளியை நம்பி ஏமாறும் காலம். உங்களின் நண்பன் யார்? நண்பராக நடித்து ஏமாற்றுபவர் யார்? என இனம் கண்டு பழகினால் மட்டுமே தப்பிக்க முடியும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் பதிகிறது. சனியின் பத்தாம் பார்வையும் ஒன்பதாமிடத்தில் பதிகிறது.ராசியதிபதி சனியும்,தனலாபதிபதி குருவும் உங்களுக்கு பாக்கிய பலனை வாரி வழங்க முடிவு செய்து விட்டார்கள்.

தந்தை ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் மகிழ்ச்சியைத் தரும் விதமாகவே இருக்கும். பல தலைமுறையாக பித்ரு தாக்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். இஷ்ட ,குல,உபாசனை தெய்வ வழிபாடு பலிதமாகும் காலம். பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும்.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் அல்லது தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற காலம். ஆன்மீகவாதிகள், குருமார்கள், துறவிகள் இவர்களின் ஆசி கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள். முன்னோர்களின் மரபணு அனைவரின் உடம்பிலும் இருப்பதால் ஒன்பதாம் பாவகம் பலப்படும் போது அழையா விருந்தாளியாக முன்னோர்களின் பரம்பரை வியாதிகளான சுகர்,பிரஷர், கை, கால் மூட்டு வலி ஜாதகரை வந்து சேரும்.

பெண்கள்: உங்களின் தோற்றம் பொழிவு பெறும். மனதில் அமைதி குடிகொள்ளும். அழகான நீங்கள்ஆடம்பரமாக உங்களை அலங்கரிக்க தனி கவனம் செலுத்துவீர்கள்.கணவரின் அன்பும் பிள்ளைகளின் பாசமும் உங்களை இல்லச் சிறையில் அடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும்.பணவரவு அதிகரிக்கும்.

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியும் உருவாகும்.பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். ஒய்வெடுக்க நேரமில்லாது உழைக்க வேண்டியது இருக்கும். பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும்.

குருவின் சஞ்சாரம் சாதகமான நிலையில் இருந்தாலும் கோட்சார ராகு /கேது, சனி சாதகமாக இல்லை. ஏழரைச் சனியின் ஆரம்பம் என்பதால் “ஓம் சுமுகாய நம “ என்ற விநாயகரின் மந்திரத்தை கூறிக் கொண்டே இருந்தால் அனைத்தும் சுபமாகவே இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை சனி ஒரையில் சிவ தரிசனம் செய்துவர தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊரில் உள்ள ஸ்ரீ மகாலிங்கேஸ்வரரை வழிபட நிலையான நிரந்தரமான தொழில் உத்தியோகம் கிடைக்கும். அரசியல் வாழ்க்கையில், பதவியில் பிரச்சனை இருப்பவர்கள் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையரை வழிபட பதவியில் உள்ள இடர்பாடுகள் அகலும்.