13.11.2021 குருப் பெயர்ச்சி - மீனம்

Nila
2 years ago
13.11.2021 குருப் பெயர்ச்சி - மீனம்

குருவின் ஆசி பெற்ற மீன ராசியினரே, இதுவரை ராசிக்கு பதினொன்றாமிடத்தில் நின்ற குரு பகவான் பன்னிரண்டாமிடத்திற்குச் செல்கிறார். சனிபகவான் பதினொன்றாமிடத்தில் நிற்கிறார். ராகு பகவான் மூன்றாமிடத்திலும் கேது பகவான் ஒன்பதாமிடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

விரய குருவின் பொதுபலன்கள்: மீனராசிக்கு குரு பகவான் ராசி அதிபதி மற்றும் பத்தாம் அதிபதி. இரு கேந்திரங்களுக்கு அதிபதியான குரு பன்னிரன்டாமி டத்தில் மறைவது சிறப்பான பலன் அல்ல. பன்னிரன்டாமிடம் என்பது விரயத்தையும், வறுமையையும், கடல் தாண்டி பயணம் செய்வதையும், மோட்சம், மறுபிறவி, சிறை தண்டனை நிம்மதியான தூக்கத்தையும் பற்றிக் கூறுமிடம். மிகக் குறைந்த காலமான 5 மாதங்கள் மட்டுமே குரு கும்பத்தில் இருப்பதால் விரைவில் நிலைமை சீராகிவிடும்.

ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை. அதனால் இன்பமும், துன்பமும் நிரந்தரமல்ல. உறவுகளும் பணமும் எப்பொழுது வரும் எப்படி போகும் என்று நிதானிக்க முடியாத காரணிகள்.

தொடர் வெற்றியை சந்திக்கும் ஒருவனுக்கு வாழ்வின் நெளிவு, சுளிவு தெரியாது. தோல்வியை சந்தித்த ஒருவனுக்கே தொழில் ஞானம் நிறைந்து இருக்கும். அந்த வகையில் உங்களின் ராசி நாதன் குரு உங்களுக்கு தொழிலை எப்படி நடத்துவது, வியாபாரம் சிறப்பாக இருக்கும் போது கிடைக்கும் உபரியை எப்படி சேமிப்பது, சிறிய சுணக்கம் ஏற்படும் போது எப்படி தன்னை சுதாரித்துக் கொண்டு நிலைத்து நிற்பது என்ற தொழில் ஞானத்தை வழங்கவுள்ளார்.

குருவின் போதனைகளை தெளிவாக உள்வாங்கும் போது எத்தனை குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு/கேது பெயர்ச்சி நடந்தாலும் உங்களை அசைக்க முடியாது. இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் ராசி நாதன் குருவினால் ஏற்படும் சில பாதகங்கள் குரு தனது சுய நட்சத்திரமான பூரட்டாதியில் செல்லும் காலமான 2.3.2022 முதல் 13.4.2022 வரை மட்டுமே என்பதால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.மேலும் லாப ஸ்தானத்தில் நிற்கும் சனியின் ஆதரவு மன நிம்மதியைத் தரும் என்பதால் பயம் தேவையில்லை.

குருபகவான் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்பவர்களுக்கு அள்ளித் தருவார். முதலீடு மிகுதியாக போட்டு ஒப்பந்தத் தொழில் செய்பவர்களுக்கு கிள்ளிக் கொடுப்பார். கமிஷன் அடிப்படையிலான தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட வருமானத்தை தருவார். வெகு சிலருக்கு தவறான வழியில் திடீர் பணக்கார யோகம் கிடைக்கும்.

உடனடியாக பணம் கிடைக்கிறது என்பதற்காக நீட்டிய இடங்களில் கையெழுத்திட்டு முறையற்ற நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது வீண் அவமானத்தை தேடித் தரும். “பதறாத காரியம் சிதறாது “முறையான திட்டமிடல் சங்கடங்களை தீர்க்கும்.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். வெற்றுப் பத்திரம்,வெற்று காசோலைகளில் கையெழுத்து இடுவதை தவிர்த்தல் நலம். கடன் வாங்கும் போதும்,திரும்பச் செலுத்தும் போது உரிய ரசீதைப் பெற வேண்டும்.நேரம் கெடும் போது வாங்கும் கடனும், திரும்பச் செலுத்திய கடனும் கூட கழுத்தை அறுக்கும்.ஜனன கால ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி நடந்தாலும் விரயம் இல்லாமல் போகாது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்.

பிள்ளைகளின் திருமணம், படிப்பு, சொத்து வாங்குவது போன்று சுப விரயமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது. சிலர் வெளிநாட்டிற்குச் சென்று பிழைப்பு நடத்த நேரும். எதிலும் நிதானத்தோடு நேர்மறை எண்ணத்துடன் சிந்தித்து செயல்பட்டால் போதும். தசா புத்தி சாதகமற்றவர்களுக்கு சோதனையான காலம். மலைபோல் நம்பிக் கொண்டிருந்த சில முக்கியமான விஷயங்கள், சாதகமாகது. பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்புகள் சாதமாகாது என்பதால் வழக்கு விசாரணையை 5 மாத காலங்களுக்கு ஒத்திப் போடவும்.

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள் ரிப்பேர், வீட்டை சீரமைக்கும் செலவு என விரயம் வரும். பணம் போனால் பரவாயில்லை மீண்டும் சம்பாதித்து விடலாம். ஒரு மனிதனுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். கடனுக்கு பயந்து ஆரோக்கிய கேட்டை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. சிலர் கால் மூட்டு அல்லது கண் அறுவை சிகிச்சை செய்யலாம். சிலர் மன மாற்றத்திற்காக புத்துணர்வு மையங்களுக்குச் சென்று திரும்புவார்கள்.

திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கூடிவரும். முதலீட்டாளர்கள் ஏப்ரல் 2022 வரை அகலக் கால் வைக்கக் கூடாது. எனினும் லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சனி மீன ராசியினரை கைவிடமாட்டார். உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கேற்ற பலனை எதிர்பார்க்காமல் காலம் தள்ள வேண்டிய நேரம்.
அரசியல் பிரமுகர்கள் பெரிய தொகையை விரயம் செய்ய நேரும். வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. விவசாயிகள் தவறான ஆலோசனையில் மதி இழந்து பழக்கமில்லாத பயிர்களை சாகுபடி செய்யக் கூடாது.

குருவின் பார்வை பதியும் நான்கு, ஆறு, எட்டாம் இடங்கள் மூலமாகவும் சில சுப பலன்கள் நடக்கும் என்பதால் தொடர்ந்து நவகிரகத்திலுள்ள குருபகவானை வழிபாட்டு வர இன்னல்கள் குறையும். கலைத்துறையினரின் கனவை நிறைவேற்றும் புதிய ஒப்பந்தங்கள் வந்து குவியும்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

குருவின் ஐந்தாம் பார்வை ராசிக்கு நான்காமிடத்தில் பதிகிறது. நான்காமிடம் என்பது ஏழுக்கு பத்தாகும். அதாவது வாழ்க்கைத் துணையின் தொழிலைக் குறிக்குமிடம். எனவே இந்த காலகட்டத்தில் வாழ்க்கைத் துணையின் மூலம் தொழில், ஊத்தியோக ஆதாயம் உண்டு என்பதால் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு நல்ல பலன்கள் நடைபெற்றாலே கிடைக்கும் பணத்தை வைத்து அனுசரித்து வாழ்ந்து விடலாம். ஒரு சிலர் பழைய அசையும், அசையாச் சொத்துக்களை விற்று பற்றாக்குறைக்கு கடன்பட்டு புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.

பிள்ளைகளின் உயர்கல்விக்கு அல்லது திருமணம் போன்ற சுப நிகழ்விற்கு அதிகம் கடன் வாங்கி செலவு செய்ய நேரும். வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாப்பது மிக அவசியம். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறிய முன்னேற்ற ஏற்படும்.நான்காமிட குருப்பார்வை மாணவர்களை தெளிந்த சிந்தனையுடன் சிறந்த முறையில் வழி நடத்தும்.தினமும் சகலகலா வல்லி மாலை படித்து வர சுபம் உண்டாகும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்: குருவின் ஏழாம் பார்வை ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு இருக்கிறது. பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனை தீர்க்க ஏற்ற காலம்.

இது வரை கட்டுக்கடங்காது இருந்த நோய் தாக்கம் குறையும். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயில் போராடியவர்களுக்கு சற்று முன்னேற்றம் இருக்கும். எதிரி தொல்லைகள் இருக்காது. தொழில் போட்டியாளர்கள் விலகுவார்கள். கண்திருஷ்டி, செய்வினை கோளாறு அகலும்.

ஆறாமிடம் பலம் பெறுவதால் கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் அணிவகுத்து வாசல் கதவை தட்டும்.புதுக் கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரும். அல்லது வியாபாரத்தை சீராக்க கடன் பெறலாம். இருண்ட குகையில் இருப்பவர்களுக்கு லேசான சூரிய வெளிச்சம் கிடைத்தது போன்ற உணர்வு இருக்கும்.கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி குறையும்.பூர்வீகச் சொத்தைப் பிரிப்பது,விற்பது போன்ற முடிவுகளை ஒத்திப் போடுவது நல்லது. தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடு குறையும் . பித்ருக்கள் தொடர்பான வழிபாட்டில் காரிய சித்தி கிடைக்கும்.பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சுயஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். புனித ஸ்தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செய்ய ஏற்ற நேரம்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்: குருவின் ஒன்பதாம் பார்வை எட்டாமிடத்திற்கு விழும் போது மரணத்திற்கு சமமான கண்டங்கள் கூட நிவர்த்தியாகும். எட்டாமிடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.ஜனன கால ஜாதகத்தில் 8ம் இடங்களில் அதிக கிரகம் நின்று மாங்கல்ய தோஷத்தால் தடைபட்ட திருமணம் பெரியோர்களின் நல்லாசியுடன் இனிதே நடைபெறும். வாழ்க்கைத் துணையின் ஆயுள், ஆரோக்கியம் சீராகும். கணவரின் ஆரோக்கிய குறைபாட்டால் கவலையடைந்த பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும்.

எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். சொத்துப்பத்திரத்தை அடமானம் வைத்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அதிக வட்டிக்கு கடன் கொடுக்கக்கூடாது.கொடுத்த பணம் திரும்ப வராது. அசலும், வட்டியும் வராமல் அடமானப் பொருளை இழக்க நேரும் என்பதால் அதிக கவனம் தேவை. நீதிமன்ற வழக்குகளில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் போது வில்லங்க சர்டிபிகேட்டை சரி பார்ப்பது அவசியம். சிலருக்கு சாதகமான தசா புக்தி நடந்தால் திடீர் அதிர்ஷ்டம், புதையல் யோகம், எதிர்பாராத பணம் வராக்கடன் வசூலாகும். விபரீத ராஜயோக ஏற்பட்டு வாழ்க்கைத் துணை மூலம் அதிக பொருள் வரவு, உயில் சொத்து, பாலிசி, சீட்டு முதிர்வுத் தொகை கிடைக்கும். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தால் ரத்தாகும்.

பெண்கள்: பாரதி கண்ட புதுமைப்பெண்ணான நீங்கள் வீட்டில் நடைபெறும் நல்லது, கெட்டதை பக்குவமாக சமாளித்து புகுந்த வீட்டினரின் அன்பைப் பெறுவீர்கள்.நேரம் கெடும் போது பொறுமை காப்பது அவசியம்.

காலம் மாறும் போது நிலைமை நிச்சயம் மாறும்.மதுரை மீனாட்சியை நினைத்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து வரவும். அனைவரிடமும் அன்பாக பேசி காரியத்தை சாதித்து கொள்ள வேண்டும். மேலும் குரு உங்களின் ராசி அதிபதி என்பதால் நியாய வாதிகளுக்கு குரு நல்லதே செய்வார்.

பரிகாரம்: சனிக்கிழமை எட்டு பேருக்கு எள்ளுருண்டை தானம் தர வேண்டும். தீராத வம்பு வழக்கை சந்திப்பவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் கால பைரவரை வழிபட வேண்டும். பழநி முருகனை ஆண்டிக் கோலத்தில் இயன்ற போது தரிசனம் செய்து வர தன வரவு தாராளமாகும். எந்த தீமையும் நிச்சயமாக உங்களை அணுகாது.