இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டைனமோட்: இருவர் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை டைனமோட் வெடிபொருட்களை கைப்பற்றியதுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (21) மாலை மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படையினரின் இரகசிய தகவலைத் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் சாந்தி புரத்தில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டு அதை சோதனை செய்த வேளையில் 998 கிலோ கிராம் எடையுள்ள வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இப்பகுதிக்கு கடத்தி வரப்படுவதாக சந்தேகிக்கப்படும் இவ் வெடிபொருள் மீன் பிடிக்க பாவிக்கப்படும் வெடி பொருள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக சாந்திபுரம் மற்றும் வங்காலை பகுதிகளைச் சேர்ந்த இருவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.