வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் விசேட அறிவிப்பு
நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
எனவே, ஏற்கனவே சினோபார்ம் தடுப்பூசி இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் அத் தடுப்பூசியைப் பெற்ற நாளிலிருந்து ஆகக்குறைந்து ஒரு மாத இடைவெளியின் பின் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.
மருத்துவரினால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களென பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு இதன்போது முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்.போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, மேற்குறிப்பிட்ட தேவையுடையவர்கள் ஏற்கெனவே தடுப்பூசி ஏற்றப்பட்ட அட்டை மற்றும் மருத்துவ அறிக்கையுடன் தங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் இம்மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.