சுமந்திரன்,சாணக்கியன் கனடா விஜயமும் அங்கே இடம்பெற்ற அசம்பாவிதமும் அரசுக்கு சாதகமா?
கனடாவில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும், அவருடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் கலந்து கொண்டமையே இக் குழப்ப நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்.
அதன் பின்னர் அங்கிருந்து கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டு கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
கனடாவில் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியானதை அடுத்தே அவருக்கு எதிரான எதிர்ப்பலைகள் ஆரம்பமாகின.
பல அரசியல் வழக்குகளை தனது சாமர்த்தியத்தால் இலகுவாக கையாள தெரிந்த சுமந்திரனும், தனது பேச்சு மற்றும் மும்மொழித் திறமையால் நாடாளுமன்றத்தையே ஆட்டம் காண வைக்கும் சாணக்கியனும் நேற்றைய நிகழ்வினை தமக்கு சாதகமாக கையாள முடியாமல் வெளியேறிச் சென்றமை, திக்குத் தெரியாத காட்டில் தனித்து விடப்பட்டவர்கள் போல இருந்தமை தமிழர் அரசியல் பரப்பில் முதன்மைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையிலே ஒரு அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் ஓரளவிற்காவது இருக்க வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.