பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன்? லங்கா4.கொம் / Lanka4.com

#spiritual
பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது ஏன்? லங்கா4.கொம் / Lanka4.com

கஜமுகாசுரனும் தோப்புக்கரணமும்

கஜமுகாசுரன் மிக்க வலிமையுடையவன்; சிவபெருமானை வேண்டிப் பெருந்தவம் புரிந்து, அவரிடம் விலங்குகளாலும், பூதங்களாலும், தேவர்களாலும், மூவர்களாலும்,அத்திரங்களாலும், சத்திரங்களாலும்,கனலாலும், புனலாலும், பிறவற்றாலும் மரணமில்லாமல் இருக்கவேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற அவன் பெரும் கர்வம் கொண்டவனான். திருமால், அயன், வானவர்கள் யாவரையும் அழைத்துத் தண்டித்து காலையும் மாலையும் தன் முன்னின்று இரு செவிகளையும் பிடித்துக் கொண்டு ஆயிரம் தோப்புக் கரணம் போடுவித்தான்.

கஜமுகனால் துன்புற்ற அமரர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். உமாதேவியாரும் சிவபெருமானும் கயிலை மலையில் உள்ள மந்திர சித்திர சாலைக்குச் சென்றனர். அங்கு எழுதியுள்ள ஏழு கோடி மந்திரங்களுக்குள் சமஷ்டி பிரணவம், வியஷ்டி பிரணவம் என்ற இரு பிரணவங்களையும் உமையம்மையாரும் சிவமூர்த்தியும் பார்த்தருளினார்கள். அந்த அருட் பார்வையால் இரண்டு பிரணவங்களும் ஒன்றுபட அவற்றின் இடையிலிருந்து பிரணவ வடிவுடன் விநாயகப் பெருமான் அவதரித்தனர். விநாயகர் அவதரித்த வரலாறு இவ்வாறாகவும் கூறப்படுகிறது.

சிவபெருமான் கஜமுகனை வதம் செய்யுமாறு கணபதிக்குக் கட்டளையிட்டருளினார். பரிவாரங்கள் சூழ விநாயகர் சென்று கஜமுகனுடைய சேனைகளை எல்லாம் கொன்றார். கஜமுகன் எல்லா ஆயுதங்களாலும் இறவாத தன்மையைக் கண்டு தம்முடைய ஒரு கொம்பை முறித்து ஏவினார். அது சென்று கஜமுகனைப் பிளந்தது. அவன் பெருச்சாளி வடிவு கொண்டு எதிர்த்தனன். விநாயகப் பெருமான், அவன் மீது கருணை மழைப் பொழிந்து அவனுடையத் தீமையை யகற்றி, வாகனமாகக் கொண்டருளினார்.

மால், அயன்முதலிய வானவர்கள் துன்பந்தவிர்ந்து இன்பம் அடைந்து விநாயகமூர்த்தியை வணங்கி நின்றார்கள். “வானவர்களே! என்ன வரம் வேண்டும்?” என்று விநாயகர் கேட்டருளினார். தேவர்கள் “இடர் தீர்த்த இபமுகத்து எந்தையே! பன்னெடுங் காலமாக கஜமுகனுக்கு முன் நாங்கள் தோப்புக் கரணம் இட்டோம். அவனை அழித்து அருள் புரிந்தீர். இனி தங்கள் திருமுன் நாங்கள் தோப்புக்கரணம் போடுவோம். அதுபோல் தோப்புக்கரணம் போட்டவர்கள் யாவரேயாயினும் இடர் தீர்த்து ஆண்டருள் புரியும்” என்று வேண்டினார்கள். கணநாதர் “உங்கள் விருப்பம்போல்செய்யுங்கள். ஆயிரம் தோப்புக்கரணம் போட வேண்டாம். மூன்று முறையே போதும். அங்ஙனம் புரிந்தார்களது இடர் நீங்கும்” என்று வரமளித்தனர். அதனால் விநாயகப் பெருமான் திருமுன் தோப்புக்கரணம் போடவேண்டும்.