அடுத்த வருடம் அரச அதிகாரிகளுக்கான இலக்கு
அடுத்த வருடம் அனைத்து அரச நிறுவனங்களும் சிறப்பான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம் அரச நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் அது தொடர்பில்
அனைத்து அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த சவாலான காலங்களில் பணிகளை இடைநிறுத்த இடமளிக்கக் கூடாது எனத் தெரிவித்த பிரதமர், பேச்சுவார்த்தை மூலம் தேவையான முடிவுகளை துரிதப்படுத்தி உரிய பணிகளை சட்டப்படி முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.