யாழ். மாநகரசபை முதல்வரை சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர்
இலங்கை நாட்டுக்கான ஜேர்மன் தூதுவர்Holger seubrt க்கும் யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று யாழ். மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவுள்ள சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்கும் ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை தூதுவரிடம் முதல்வர் முன்வைத்துள்ளார்.
மேலும் யுத்த அழிவில் இருந்து மீண்டுவரும் எமது பிராந்திய அபிவிருத்திக்கும் யேர்மன் உதவ வேண்டும் என்றும் யாழ் மாநகர சபைக்கும் யேர்மனின் பிரதான நகரங்களுடன் இரட்டை நகர் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு இணைந்து செயற்படுவதற்கும் உதவ வேண்டும் என்றும் முதல்வர் தூதுவரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.