இலங்கை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கும்வரை போராட தயாராகும் பிரிட்டனின் எம்.பிக்கள்!

#SriLanka #Tamil People
Nila
4 years ago
இலங்கை  தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கும்வரை போராட தயாராகும் பிரிட்டனின்  எம்.பிக்கள்!

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் தற்போது வரை எந்தவொரு நபரும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. மனித உரிமைகள் மீறல்கள் அங்கு வழக்கமானவையாக மாறியிருக்கின்ற சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் மனித உரிமைகள் என்பன உறுதிசெய்யப்படும் வரையில் அதற்காகத் தொடர்ந்து போராடத் தயாராக உள்ளதாக பிரிட்டனின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சியோபெய்ன் மெக்டொனாக், கெரெத் தோமஸ், ஸ்டீவ் பேக்கர் ஆகியோர் மாவீரர்நாளை முன்னிட்டு காணொலி மூலம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் சியோபெய்ன் மெக்டொனாக் கூறுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் தற்போதுவரை எந்தவொரு நபரும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.

இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட படுகொலைகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவை தொடர்பில் நீதியை அடைந்து கொள்வதற்கான முயற்சிகள் தற்போது சர்வதேசத்தை நோக்கி நகரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதற்கான மிகச்சிறந்த வாய்ப்பை அண்மைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் வழங்கியிருக்கின்றது.

நல்லிணக்கத்திற்கான பாதையைக் கடப்பதற்கு எந்தளவு தூரம் இருந்தாலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் மனித உரிமைகள் என்பன உறுதி செய்யப்படும் வரையில் நாம் அதற்காகத் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

கெரெத் தோமஸ் எம். பி. கூறுகையில்,

மாவீரர்நாள் என்பது 2009ஆம் ஆண்டில் இலங்கையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போரின் பல்வேறு கசப்பான சம்பவங்களை நினைவுபடுத்துகின்றது.

இருப்பினும் நீண்டகாலப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரும் இலங்கைவாழ் தமிழ்மக்கள் தொடர்பான நகர்வுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் வழக்கமானவையாக மாறிவிட்டன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட மிகமோசமான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரம் தற்போதும் தொடர்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.

ஸ்டீவ் பேக்கர் எம். பி. பேசுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற அடக்கு முறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முகம்கொடுத்த அனைத்துத் தமிழர்களையும் நினைவுகூருகின்றோம். போரின்போது ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

மேலும், பலருக்கு என்ன நேர்ந்தது என்பதே தெரியாமல் போயிருக்கின்றது. போரில் உயிரிழந்தவர்களை எவ்வித தடைகளுமின்றி நினைவுகூருவதென்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால், அது அனைத்து சந்தர்ப்பங்களிலும் சாத்தியப்படாமை பெரிதும் விசனமளிக்கின்றது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4