பாலியல் கல்வி அவசியமானது! சுட்டிக்காட்டிய பணிப்பாளர்
பாலின கல்வி தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானது என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர் சமுதாயத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாலின கல்வி தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியமானது எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
"இலங்கையில் 3,700 எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களில் 60% பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர். மீதமுள்ள 40% உண்மையில் சிகிச்சை பெறாமல் நம் சமூகத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டில் 15-24 வயதுக்குட்பட்டவர்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எங்களின் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. எனவே, இளைஞர்களுக்கு பாலியல் கல்வியை வழங்குவது மிகவும் அவசியம். 90% பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் எச்ஐவி பரவுகிறது. எச்ஐவி வைரஸ் எய்ட்ஸாக மாற சுமார் 12 ஆண்டுகள் ஆகும். ஆனால் சிகிச்சை பெறும் போது அந்த நிலை குறைவடைகிறது என தெரிவித்தார்.