துரித கதியில் அதிகரிக்கும் சட்டவிரோத மதுபான விற்பனை!
நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் துரித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், கலால் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னரும் சட்டவிரோத மதுபானம் மீதான போக்கு அதிகமாக உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனையடுத்து, நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களை உள்ளடக்கிய காலப்பகுதியில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்புகளின் போது குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3587 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட வழக்கு பொருட்களின் மொத்த பெறுமதி 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.