இலங்கையின் பிரதமராக ரணிலை நியமிக்க திட்டமா?
கோட்டாபய அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் திட்டமும் அரசாங்கத்திடம் எதுவும் இல்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண (Ramesh pathrana) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அதற்குப் பதிலாக பசில் ராஜபக்ச அல்லது ரணில் விக்ரமசிங்க அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பட்ட நிலையில் அதற்குப் பதிலளிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் ஏற்படாது என அமைச்சரவை இணைப்பேச்சாளர் பதிலளித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த செய்தியை மறுத்திருந்தது.
அபுதாபியில் நடைபெற்ற இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் மாநாட்டில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்லாது, முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற அங்கத்துவம் கிடைத்தது. அந்த கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.